'மெர்சல்' உதவியால் ஓபிஎஸ்-க்கு ஆப்பு வைத்த தினகரன் ஆதரவாளர்

  • IndiaGlitz, [Tuesday,October 24 2017]

தளபதி விஜய்யின் 'மெர்சல் திரைப்படம் தான் கடந்த ஐந்து நாட்களாக இந்தியாவின் தேசிய செய்தியாக இருந்து வருகிறது. கமல், ரஜினியை அடுத்து மெர்சல் மூலம் விஜய்யும் இந்திய அளவிலான ஸ்டாராக மாறிவிட்டார்.

இந்த நிலையில் ஓபிஎஸ் ஆதரவு கூட்டம் ஒன்றை தினகரன் ஆதரவாளர் 'மெர்சல் உதவியால் நிலைகுலைய செய்துவிட்டார். தேனி அருகேயுள்ள கூடலூரில் அதிமுகவின் பொதுக்கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. துணை முதல்வர் ஓபிஎஸ் உள்பட அதிமுகவின் முக்கிய தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள இருந்தனர்.

இந்த நிலையில் இந்த கூட்டம் தொடங்குவதற்கு சில நிமிடம் முன்பு இந்த பகுதியை சேர்ந்த தினகரன் ஆதரவாளரும் இந்த பகுதியில் உள்ள திரையரங்கம் ஒன்றின் உரிமையாளருமான அருண்குமார் என்பவர் விஜய்யின் 'மெர்சல்' படத்தை டிக்கெட் இல்லாமல் இலவசமாக திரையிடுவதாக அறிவித்தாராம்.

இந்த தகவல் காட்டுத்தீயாக பரவியதும் ஓபிஎஸ் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த அதிமுக தொண்டர்கள் அனைவரும் தியேட்டரை நோக்கி சென்றுவிட்டனர். இதனால் ஓபிஎஸ் கலந்து கொள்ளவிருந்த கூட்டம், கூட்டமே இல்லாமல் காத்தாடியது. நல்லவேளையாக வேறு பணிகள் இருந்ததால் ஓபிஎஸ் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வது கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதாம். இருப்பினும் இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்த அதிமுக நிர்வாகிகளுக்கு டோஸ் விழுந்ததாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.