பொய்ப்புகார் கூறி புகழ்பெற முயற்சி: மீராமிதுன் குற்றச்சாட்டு

  • IndiaGlitz, [Wednesday,August 28 2019]

சமூகத்தில் பிரபலமாக இருக்கும் என் மீது பொய் புகார் கூறி ஒருசிலர் புகழ் அடைய முயற்சிப்பதாக பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான மீரா மிதுன் குற்றம்சாட்டியுள்ளார்.

மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்று பின் அந்த பட்டத்தை தவறாக பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்ட மீராமிதுன் மீது ஏற்கனவே பல்வேறு புகார்கள் இருந்தாலும் அவர் மக்களிடம் நல்ல பெயர் எடுக்க பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு நல்ல வாய்ப்பை கொடுத்தது. ஆனால் பிக்பாஸ் வீட்டில் சென்றது முதல் சேரன் உள்பட ஒவ்வொருவரையும் மீராமிதுன் குறிவைத்து வீண்பழி சுமத்தியதால் பார்வையாளர்கள் வெறுப்படைந்து அவரை வெளியேற்றினர்.

இந்த நிலையில் மீராமிதுன் மீது ஜோ மைக்கேல் என்பவர் சமீபத்தில் காவல்துறையிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அவர் தனது புகாரில் தன் மீதும், தனது குடும்பத்தினர் மீதும் தாக்குதல் நடத்த மீரா மிதுன் திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். இந்த புகாரின் மீரா மிதுன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இதுகுறித்து பேட்டியளித்த மீராமிதுன், 'பணம் கேட்டு தமது குடும்பத்தை ஜோ மைக்கேல் மிரட்டுவதாகவும், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் தெரிவித்தார். மேலும் சமூகத்தில் பிரபலமான முகமாக இருக்கும் தன்னைப் பற்றி பொய் புகார் கூறி புகழ் அடைய சிலர் முயற்சிப்பதாகவும் மீரா மிதுன் குற்றம்சாட்டியுள்ளார்.