20 வருடங்களுக்கு பின் சினிமாவில் ரீஎண்ட்ரி ஆகும் மணிரத்னம் நாயகி.. 'கீதாஞ்சலி'யை மறக்க முடியுமா?

  • IndiaGlitz, [Thursday,August 17 2023]

மணிரத்னம் இயக்கத்தில் உருவான ஒரு திரைப்படத்தில் கீதாஞ்சலி என்ற கேரக்டரில் நடித்த நடிகை 20 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் சினிமாவில் ரீஎண்ட்ரி தர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

மணிரத்னம் இயக்கத்தில் நாகார்ஜுனா, கிரிஜா நடித்த திரைப்படம் ’கீதாஞ்சலி’. தெலுங்கில் உருவான இந்த படம் தமிழில் ’இதயத்தை திருடாதே’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டது என்பதும் ஒரிஜினல் தமிழ் படத்திற்கு கிடைக்கும் வசூல் இந்த படத்துக்கு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த படத்தால் நடிகை கிரிஜாவுக்கு ரசிகர்கள் குவிந்தனர்.

கடந்த 1989 ஆம் ஆண்டு இந்த படம் வெளியான நிலையில் அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே கிரிஜா நடித்தார். 2003 ஆம் ஆண்டு இந்தி திரைப்படம் ஒன்றில் சிறப்பு தோற்றத்தில் நடித்த நிலையில் அவர் இங்கிலாந்து சென்று விட்டார். அங்கு அவர் பத்திரிகையாளராக பணியாற்றியதாக கூறப்பட்டது

இந்த நிலையில் 20 ஆண்டுகள் கழித்து தற்போது ஒரு கன்னட திரைப்படத்தில் நடிக்க கிரிஜா ஒப்பந்தமாகியுள்ளார். சந்திரஜித் பெலியப்பா என்பவரது இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தில் சிங்கிள் மதர் கேரக்டரில் கிரிஜா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றால் தொடர்ந்து கிரிஜா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.