அஜித், விஜய் வீடுகளுக்கு மிரட்டல் விடுத்தது ஒரே நபரா? பரபரப்பு தகவல்

  • IndiaGlitz, [Sunday,July 19 2020]

தல அஜித் வீட்டில் நேற்று வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்ததை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம மனிதன் அஜித்தின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப் போவதாக மிரட்டல் விடுத்துவிட்டு அழைப்பை துண்டித்த நிலையில் அஜித்தின் ஈஞ்சம்பாக்கம் வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர் ஆனால் சோதனையின் முடிவில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பதால் இது வெறும் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது.

ஏற்கனவே ரஜினி, விஜய் ஆகிய இரண்டு நடிகர்களுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது புரளி என உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது அஜீத்தின் வீட்டிற்கு வெடிகுண்டு வைக்கப்பட்ட மிரட்டலும் புரளி என்பது உறுதியானது. இதனை அடுத்து மிரட்டல் விடுக்கப்பட்ட தொலை பேசி எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் அஜித் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் என்ற பகுதியை சேர்ந்த புவனேஷ் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இதே நபர் தான் கடந்த வாரம் விஜய் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து புவனேஷை கைது செய்த மரக்காணம் போலீஸார் அவரை நீலாங்கரை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். விஜய், அஜித் ஆகிய இரு பிரபல நடிகர்களின் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் ஒரே நபர் என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.