தாத்தாவை புதைக்க குழி தோண்டிய பேரன் திடீர் மரணம்: அருகருகே புதைக்கப்பட்ட சோகம்

உத்தர பிரதேச மாநிலத்தில் உயிரிழந்த தாத்தாவை அடக்கம் செய்ய அவரது பேரன் குழி தோண்டியபோது திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார். பின்னர் இருவரையும் அருகருகே புதைத்த சோக சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜன்சாத் என்ற பகுதியில் வசித்த 80 வயதான, முகம்மது யூசுப் என்பவர் சமீபத்தில் இயற்கை எய்தினார். இதனை அடுத்து அவரது பேரன் சலிம் தனது நண்பர்களின் உதவியுடன் தாத்தாவை அடக்கம் செய்ய குழி தோண்டினார். அப்போது திடீரென சலிமுக்கு நெஞ்சுவலி வந்ததால் அவர் சுருண்டு விழுந்தார். உடனே அவரை அவரது நண்பர்கள் அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சலீம் எற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர் கூற அவரது நண்பர்களும் உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் தாத்தா அருகிலேயே அவரது பேரன் சலீம் உடலும் புதைக்கப்பட்டது.

முன்னதாக சலீம் தனது தாத்தாவுக்கு குழி தோண்டும்போது அதன் அருகில் இன்னொரு குழி தோண்டுமாறு நண்பரிடம் கூறியதாகவும், அவருக்கு ஏற்கனவே தனது முடிவு குறித்து உள்ளுணர்வு தெரிந்திருக்கலாம் என்றும் சலீம் உறவினர் பாபர் அஹ்மது என்பவர் கூறியுள்ளார். மரணம் அடைந்த சலீமுக்கு மனைவியும் 5 குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.