close
Choose your channels

மகாகவி பாரதியாரும் தமிழ் சினிமாவும்.. பாரதியார் பிறந்த நாள் சிறப்பு கட்டுரை

Sunday, September 11, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்திய சுதந்திர போராட்டத்திற்காக பாடுபட்ட தமிழக தலைவர்களில் மிக முக்கியமானவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார். தனது புரட்சிமிகுந்த கருத்துக்களை பாடல்களின் மூலம் நாட்டு மக்களுக்கு சுதந்திர வேட்கையை உருவாக்கியவர். 38 வருடங்கள் மட்டுமே வாழ்ந்தாலும் அவரது புகழ் இன்றளவும் போற்றப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில் பாரதியாரின் பல பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவரது பாடல்களின் வரிகளான 'கன்னத்தில் முத்தமிட்டால், மனதில் உறுதி வேண்டும், காற்று வெளியிடை ஆகியவை திரைப்படங்களுக்கு டைட்டில்களாக உருவாகியுள்ளது. பாரதியாரின் வாழ்க்கை வரலாறு தமிழில் திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது. இந்நிலையில் இன்று பாரதியாரின் பிறந்த நாள் தமிழகம் முழுவதும் வெகுசிறப்பாக அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழ் சினிமாவில் பாரதியாரின் பாடல்கள் குறித்து தற்போது விரிவாக பார்ப்போம்.
1. நாம் இருவர்: கடந்த 1947ஆம் ஆண்டு சுதந்திரம் பெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் வெளியான இந்த படத்தில் டி.ஆர்.மகாலிங்கம், டி.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.வி.மெய்யப்ப செட்டியார் தயாரித்து இயக்கியிருந்த இந்த படத்தில் 'ஆடுவோமே பள்ளி பாடுவோமே', 'விடுதலை விடுதலை விடுதலை', வாழிய செந்தமிழ், வாழிய நற்றமிழ், உள்பட பாரதியார் எழுதிய 5 பாடல்கள் இடம்பெற்றிருந்தன.
2. பராசக்தி: சிவாஜி கணேசன் நடித்த முதல் படம். இந்த படத்தில் 'நெஞ்சு பொறுக்குதில்லையே' என்ற பாரதியார் எழுதிய பாடல் இடம்பெற்று மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது. இந்த படத்திற்கு கலைஞர் மு.கருணாநிதி வசனம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
3. கப்பலோட்டிய தமிழன்: வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான இந்த படத்தில் பாரதியாராக எஸ்.வி.சுப்பையா நடித்திருந்தார். இந்த கேரக்டருக்கு நிச்சயமாக தன்னைவிட யாரும் பொருத்தமாக இருக்க முடியாது என்ற அளவுக்கு இருந்தது அவரது அபாரமான நடிப்பு. 'வெள்ளிப்பனிமலையின் மீதுலாவுவோம், 'என்று தணியும் இந்த சுதந்திர தாகம்', 'காற்று வெளியிட கண்ணம்மா,' ஓடி விளையாடு பாப்பா போன்ற பாரதியாரின் பாடல்கள் இந்த படத்தில் இடம்பெற்றிருந்தது.
4. படிக்காத மேதை: சிவாஜிகணேசன் செளகார் ஜானகி, ரெங்காராவ் நடிப்பில் ஏ.பீம்சிங் இயக்கிய இந்த படத்தில் பாரதியார் எழுதிய 'எங்கிருந்தோ வந்தான்' என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. சீர்காழி கோவிந்தராஜனின் வெண்கலகுரலில் அமைந்த இந்த பாடலை மிகப்பொருத்தமான இடத்தில் இயக்குனர் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
5. கை கொடுத்த தெய்வம்: சிவாஜிகணேசன், சாவித்திரி நடித்த இந்த படத்தை கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார். தேசிய விருது வென்ற இந்த படத்தில் 'சிந்து நதியின் மிசை நிலவினிலே என்ற பாரதியார் பாடல் இடம்பெற்றிருந்தது. சிவாஜி கணேசன் பாரதியார் வேடத்தில் இந்த பாடலுக்கு நடித்திருப்பார்.

6. ஏழாவது மனிதன்: பிரபல வில்லன் மற்றும் குணசித்திர நடிகர் ரகுவரன் அறிமுகமான முதல் படம் இது. இந்த படத்தில் பாரதியார் எழுதிய காக்கைச் சிறகினிலே, வீணையடி நீ எனக்கு, நல்லதோர் வீணை, அச்சமில்லை அச்சமில்லை, நெஞ்சில் உரமுமின்றி, ஓடி விளையாடு பாப்பா, மனதில் உறுதி வேண்டும், செந்தமிழ் நாடென்னும் ஆகிய பாடல்கள் இடம்பெற்றிருந்தன. இந்த படம் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதையும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
7. வறுமையின் நிறம் சிகப்பு: கே.பாலசந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடித்த இந்த படத்தில் கமல்ஹாசன் பாரதியாரின் தீவிர ரசிகராக நடித்திருப்பார். அவ்வப்போது பாரதியாரின் பாடல்களை அவர் இந்த படத்தில் வசன நடையாக பேசியிருப்பார். மேலும் இந்த படத்தில் பாரதியார் எழுதிய 'தீர்த்தகரையினிலே' என்ற பாடலும், 'தீர்த்தக்ரையினிலே என்ற பாடலும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
8. சிந்து பைரவி: கே.பாலசந்தர் இயக்கத்தில் சிவகுமார், சுஹாசினி நடிப்பில் வெளிவந்த இந்த படம் சுஹாசினிக்கு தேசிய விருது பெற்று கொடுத்த படம். இந்த படத்தில் 'மனதில் உறுதி வேண்டும்' என்ற பாரதியார் பாடல் இடம்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
9. பாரதி: பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்திய படம். பல இளைஞர்கள் பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்ள உதவிய இந்த படத்தை ஐஏஎஸ் அதிகாரி ஞான ராஜசேகரன் இயக்கியிருந்தார். சுப்பிரமணிய பாரதியாராக சாயாஜி ஷிண்டே மிக அபாரமாக நடித்திருந்தார். இசைஞானி இளையராஜாவின் இசையில் பாரதியார் எழுதிய நிற்பதுவே நடப்பதுவே, கேளடா மானிடவா, நின்னைச்சரண், பாரத சமுதாயம், எதிலும் இங்கு, வந்தேமாதரம், அக்கினி குஞ்சு, நல்லதோர் வீணை, நின்னைச் சரணடைந்தேன் ஆகிய பாடல்கள் இந்த படத்தில் இடம்பெற்றிருந்தன.
10. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்: ராஜீவ் மேனன் இயக்கத்தில் அஜித், மம்முட்டி, ஐஸ்வர்யாராய், தபு நடித்த இந்த படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாரதியார் எழுதிய சுட்டும் விழிச்சுடர்தான்' என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. முதல்முறையாக ரஹ்மான் இசையில் பாரதியார் பாடலை ரசிகர்கள் கேட்டு பரவசம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment