மீண்டும் உயிர்ப்பெறும் 'மாநாடு': சிம்பு ரசிகர்கள் உற்சாகம்

  • IndiaGlitz, [Saturday,October 19 2019]

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ’மாநாடு’ என்ற திரைப்படம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் சில மாதங்கள் நடைபெற்றதோடு, படப்பிடிப்பு தாய்லாந்தில் நடத்தவும் திட்டமிடப்பட்டது.

இந்த நிலையில் திடீரென படத்திற்கு சிம்பு சரியாக ஒத்துழைக்கவில்லை என்றும், எனவே இந்த படத்தில் இருந்து சிம்புவை நீக்குவதாகவும், சிம்புவுக்கு பதில் வேறொரு பிரபல நடிகர் இந்த படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் தெரிவித்து இருந்தார். ஆனால் கோலிவுட் வட்டாரங்களில் இந்த படம் டிராப் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதனை அடுத்து சிம்புவின் தரப்பிலிருந்து ’மகா மாநாடு’ என்ற படம் தயாரிக்க இருப்பதாகவும் பதிலடி கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் அவர்கள் கலந்துகொண்டு ’மாநாடு’ படத்தின் படப்பிடிப்பில் சிம்பு வருவதற்குத்தான் தான் உத்தரவாதம் அளிப்பதாகவும், காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை சிம்பு சரியாக படப்பிடிப்புக்கு வருவார் என்றும் உறுதி அளித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இதனை அடுத்து விரைவில் ’மாநாடு’ திரைப்படம் சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதால் சிம்பு ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.