வருமான வரித்துறையில் இருந்து போன் வந்ததும் பயந்துவிட்டேன்: லோகேஷ் கனகராஜ்

  • IndiaGlitz, [Thursday,January 12 2023]

வருமானவரித்துறையினரிடம் இருந்து போன் வந்ததும் பயந்துவிட்டேன் என வருமானவரித்துறை ஏற்பாடு செய்த விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேசினார்.

கோவையில் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு வருமானவரித்துறை சார்பாக இளம் தொழில் அதிபருக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கும் விருது வழங்கப்பட்டது.

அந்த விழாவில் லோகேஷ் கனகராஜ் பேசிய போது ’நேற்று வருமானவரித்துறை இடம் இருந்து போன் வந்த போது முதலில் பயந்துவிட்டேன். அதன் பிறகு தான் விருது தருவதாக தெரிவித்த பிறகு மகிழ்ச்சி அடைந்தேன்.

வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு வேண்டுகோளாக நாங்கள் செலுத்தக்கூடிய வருமானவரித்துறை எங்கு செல்கிறது என்று தெரிவித்தால் மகிழ்ச்சியாக இருக்கும். அதனை மக்கள் அனைவருக்கும் தெரியும் வகையில் வருமான வரித்துறையினர் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் நாம் கட்டும் வரி எங்கு செல்கிறது என்று தெரிந்தால் அதை சுமையாக பார்க்காமல் மக்கள் மகிழ்ச்சியாக வரி செலுத்துவார்கள், இது குறித்த விழிப்புணர்வை வருமானவரித்துறை அதிகாரிகள் செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த லோகேஷ் கனகராஜ், ‘வாரிசு பட ரிலீஸ் ஆகவேண்டும் என்பதற்காகத்தான் ’தளபதி 67’ அப்டேட் தராமல் இருந்தேன் என்றும் இன்னும் 10 நாள்களில் தளபதி அப்டேட் வரும் என்றும் அதன் பிறகு தொடர்ச்சியாக ரசிகர்களுக்கு அப்டேட் வந்து கொண்டே இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படம் தீபாவளி அல்லது பொங்கலுக்கு ரிலீசாக திட்டமிட்டுள்ளதாகவும் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.