பாபிசிம்ஹாவின் 'கோ 2' படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல்

  • IndiaGlitz, [Saturday,December 12 2015]

பீட்சா, சூது கவ்வும், நேரம் ஆகிய படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்து வந்த நடிகர் பாபிசிம்ஹா, 'ஜிகர்தண்டா' என்ற ஒரே படத்தில் உச்சத்தை அடைந்தது மட்டுமின்றி தேசிய விருதும் பெற்றார். தற்போது முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இடம்பெற்றுவிட்ட பாபிசிம்ஹாவுக்கு கைவசம் அரை டஜனுக்கும் மேல் படங்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாபிசிம்ஹாவின் 'உறுமீன்' திரைப்படம் சமீபத்தில் ரிலீஸாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அவர் நடித்து வரும் மற்றொரு படமான 'கோ 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் பாபிசிம்ஹாவுக்கு ஜோடியாக 'டார்லிங்' நாயகி நிகில்கல்ராணி நடித்து வருகிறார். மேலும் பிரகாஷ்ராஜ், பாலசரவணன் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா, கார்த்திகா நாயர் நடித்த 'கோ' படத்தை தயாரித்த ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. லியான் ஜேம்ஸ் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு பிலிப் ஆர்.சுந்தர், வெங்கட் ஒளிப்பதிவும், கெவின் படத்தொகுப்பும் செய்துள்ளனர். இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது