ஷாருக்கான் படத்தில் 'பாகுபலி' ஒளிப்பதிவாளர்

  • IndiaGlitz, [Sunday,September 20 2015]

பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் நடித்து வரும் 'தில்வாலே (Dilwale) திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் கஜோல், வருண் தவான், உள்பட பலர் நடித்து வருகின்றனர். ரோஹித் ஷெட்டி இயக்கி வரும் இந்த படத்திற்கு டட்லி' ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் நடைபெற்று வந்தது. இந்த படப்பிடிப்பு தளம் அருகில் 'பாகுபலி 2' படத்தின் படப்பிடிப்பிற்காக ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதை கேள்விப்பட்ட ரோஹித் ஷெட்டி, அங்கு சென்று பாகுபலி படத்தின் ஒளிப்பதிவாளர் செந்தில்குமாரை சந்தித்ததாக கூறப்படுகிறது.

பாகுபலி' படத்தில் செந்தில்குமாரின் ஒளிப்பதிவை பாராட்டிய ரோஹித் ஷெட்டி, தற்போது நடைபெற்று வரும் ஷாருக்கான் - கஜோல் நடிக்கும் பாடல் ஒன்றை ஒளிப்பதிவு செய்யும்படி கேட்டுக்கொண்டதாகவும், அவருடைய விருப்பத்திற்கு இணங்க ஒரு பாடலுக்கு ஒளிப்பதிவு செய்ய செந்தில்குமார் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. அனேகமாக அடுத்த ரோஹித் ஷெட்டி படத்திற்கு செந்தில்குமார் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.