சூர்யாவுக்கு கதை சொன்ன பிரபல மலையாள இயக்குனர்: படப்பிடிப்பு எப்போது? 

  • IndiaGlitz, [Sunday,January 15 2023]

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா ஏற்கனவே பல முன்னணி இயக்குனர்களின் படத்தில் நடிக்க இருக்கும் நிலையில் தற்போது கேரள முன்னணி இயக்குனர் ஒருவரிடம் கதை கேட்டு விரைவில் அந்த படத்தை உறுதி செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

கேரள திரையுலகின் முன்னணி இயக்குனரான லியோ ஜோஸ் பல மலையாள் வெற்றி படங்களை இயக்கியுள்ளார் என்பதும், குறிப்பாக ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் சூர்யாவை சந்தித்து கதை கூறியிருப்பதாகவும் சூர்யாவுக்கு அந்த கதை மிகவும் பிடித்து விட்டதாகவும் விரைவில் சூர்யாவிடம் இருந்து இந்த படத்தில் நடிப்பது குறித்து அழைப்பு வரும் என்றுதான் எதிர்பார்ப்பதாகவும் இயக்குனர் லியோ ஜோஸ் பேட்டியில் தெரிவித்துள்ளார். சூர்யாவுக்கு கேரளாவில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருப்பதால் விரைவில் அவர் லியோ ஜோஸ் இயக்கத்தில் உருவாகும் தமிழ், மலையாளம் திரைப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் ’சூர்யா 42’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு அவர் வெற்றிமாறனின் இயக்கத்தில் உருவாகும் ’வாடிவாசல்’ மற்றும் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகும் படம் என பிசியாக இருக்கும் நிலையில் லியோ ஸ் மற்றும் சூர்யா இணையும் படம் எப்போது உருவாகும்? இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது? என்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.