அரசியல் பேசுனா என்ன தப்பு.. 'ப்ளூ ஸ்டார்' இசை வெளியீட்டு விழாவில் கீர்த்தி பாண்டியன்..!

  • IndiaGlitz, [Monday,January 22 2024]

பா ரஞ்சித் பெயரை பேசினாலே அரசியல் பேசுவதாக சிலர் கூறுகின்றனர். அரசியல் பேசுவதில் என்ன தவறு? என்று நடிகை கீர்த்தி பாண்டியன் ’ப்ளூ ஸ்டார்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார்.

அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் ஆகிய இருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்த நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த படம் தான் ’ப்ளூ ஸ்டார்’. இந்த படத்தின் படப்பிடிப்பில் தான் இருவருக்கும் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடந்த நிலையில் தயாரிப்பாளர் பா. ரஞ்சித் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் கீர்த்தி பாண்டியன் பேசியபோது ’நான் முதன் முதலில் இயக்குனர் ஜெயக்குமாரை சந்தித்து கதையை கேட்ட போது எனது கதாபாத்திரம் பிடித்து இருக்கிறதா என்று கேட்டார். அந்த கதையை கேட்டதும் எனக்கு அதிலிருந்த அனைத்து கதாபாத்திரங்களும் தாக்கத்தை கொடுத்தது’ என்று கூறினேன்.

இந்த படத்தில் கிரிக்கெட் என்பது ஒரு முக்கியமான விஷயமாக உள்ளது. மேலும் பா ரஞ்சித் அவர்கள் தயாரிக்கிறார் என்றவுடன் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். பா ரஞ்சித் பெயர் வந்தாலே அரசியல் பேசுவதாக சிலர் கேட்கிறார்கள். அரசியல் பேசினால் என்ன தப்பு? நம்முடைய அன்றாட வாழ்வில் அரசியல் இருக்கிறது, அதை பற்றி பேசவில்லை என்றால் தான் தவறு.

பா ரஞ்சித் தயாரிக்கும் படங்களிலும் சரி, இயக்கும் படங்களையும் சரி நிச்சயம் அரசியலை வைத்திருப்பார். அந்த வகையில் என்னுடைய குரலை இந்த படத்தில் பயன்படுத்துவதை நான் பெருமையாக நினைக்கிறேன்’ என்று தெரிவித்தார்.