பக்கத்து வீட்டுக்காரருக்கு ஏற்பட்ட பிரச்சனை.. கொதித்து எழுந்த கீர்த்தி பாண்டியன்..!

  • IndiaGlitz, [Tuesday,December 26 2023]

நடிகை கீர்த்தி பாண்டியன் தனது பக்கத்து வீட்டுக்காரருக்கு ஏற்பட்ட ஒரு பிரச்சனை குறித்து தனது சமூக வலைதளத்தில் ஆவேசமாக பதிவு செய்துள்ளார். இந்த பதிவை அடுத்து அவருக்கு நெட்டிசன்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்

நடிகை கீர்த்தி பாண்டியனின் பக்கத்து வீட்டில் இருக்கும் சரவணகுமார் என்பவர் கடந்த ஆறு வாரங்களுக்கு முன்னர் 26 லட்ச ரூபாய் கொடுத்து எலக்ட்ரிக் கார் ஒன்றை வாங்கினார். இதனை அவர் தனது வீட்டு பார்க்கிங்கில் நிறுத்தி இருந்த நிலையில் திடீரென அந்த கார் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து தீயணைப்பு துறையினர்களுக்கு தகவல் கொடுத்த நிலையில் அரைமணி நேரத்தில் தீயை அணைத்தனர்.

கார் திடீரென தீப்பற்றி எரிந்தது குறித்து கார் நிறுவனத்திற்கு அவர் தகவல் கொடுத்தும் கார் நிறுவனம் கண்டுகொள்ளவில்லை என்று அவர் தனது ஆதங்கத்தை தெரிவித்து இருந்தார். இந்த ட்விட்டை ரீடுவிட் செய்த கீர்த்தி பாண்டியன், ‘சரவணகுமார் என்னுடைய பக்கத்து வீட்டுக்காரர் தான், அவருடைய வீட்டில் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை இருக்கிறார்கள். இந்த விபத்தின் போது அவர்கள் யாராவது உள்ளே இருந்திருந்தால் என்ன ஆயிருக்கும்? ரொம்ப ஆபத்தான ஒன்று. உடனடியாக கார் நிறுவனம் பொறுப்புடன் நடந்து கொண்டு அவரது இழப்பிற்கு பதில் சொல்லுங்கள்’ என்று ஆவேசமாக பதிவு செய்துள்ளார்.

பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு பிரச்சனை நடக்கும்போது கூட அதை கண்டுகொள்ளாமல் இருக்கும் பொது மக்கள் மத்தியில் கீர்த்தி பாண்டியன் பிறருக்கு உதவும் தங்கமான மனசு கொண்டவர் என கமெண்ட் பகுதியில் ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.