எனக்கும் விசித்ராவுக்கு நடந்தது போல் நடந்துள்ளது: 'காதல்' நடிகை அதிர்ச்சி தகவல்..!

  • IndiaGlitz, [Sunday,November 26 2023]

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான விசித்ரா சமீபத்தில் நடந்த பூகம்பம் டாஸ்க்கில் தனக்கு படப்பிடிப்பின் போது ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை கூறினார். அது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்பதும் நேற்று கூட கமல்ஹாசன், விசித்ரா தைரியமாக அதே நேரத்தில் நாகரீகமாக அந்த குற்றச்சாட்டை முன்வைத்ததாக பாராட்டினார். மேலும் விசித்ராவின் கணவரிடம் தான் பேசியதாகவும் அந்த நேரத்தில் எந்த பெண்ணாக இருந்திருந்தாலும் நான் காப்பாற்றி இருப்பேன் என்று அவர் தன்னிடம் சொன்னதாகவும் கமல்ஹாசன் தெரிவித்தார்.

இந்த நிலையில் விசித்ராவுக்கு நடந்த கசப்பான அனுபவம் தனக்கும் நடந்துள்ளதாக பரத், சந்தியா நடித்த ‘காதல்’ திரைப்படத்தில் நடித்த சரண்யா கூறியுள்ளார். எனக்கும் விசித்ரா சொன்னது போல் நடந்திருக்கிறது என்றும் நானும் சில கசப்பான அனுபவங்களை சந்தித்து இருக்கின்றேன் என்றும் ஆனால் அதை எல்லாம் இப்போது பேசினால் யாரும் காது கொடுத்து கேட்க மாட்டார்கள்’ என்றும் தெரிவித்துள்ளார்.

’பெரிய நடிகைகள் புகார் கொடுத்தால் மட்டும்தான் எடுபடும், சின்ன நடிகைகள் சொன்னால் எடுபடாது, அப்படியே வெளியே சொன்னாலும் மீடியா என்றாலே இப்படித்தான் இருக்கும் என்று தெரிந்து தானே வந்திருக்கிறாய் என சிலர் இளக்காரமாக பேசுவார்கள்.

இந்த பிரச்சனையை சினிமா துறையில் மட்டுமல்ல, பல துறைகளில் விசித்ரா சொன்னது போல் இருக்கிறது என்றும் வெளியில் சொல்ல முடியாத பல கதைகள் இருக்கிறது’ என்றும் நடிகை சரண்யா கூறியுள்ளார்.