இன்று கார்த்தியின் புதிய பட பூஜை.. இயக்குனர் இசையமைப்பாளர் யார்? படப்பிடிப்பு எப்போது?

  • IndiaGlitz, [Friday,July 12 2024]

நடிகர் கார்த்தியின் புதிய படத்தின் பூஜை இன்று சென்னையில் நடந்த நிலையில் இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்தி தற்போது ’வா வாத்தியாரே’ மற்றும் ‘மெய்யழகன்’ ஆகிய இரு படங்களில் நடித்து முடித்துள்ளார் என்பதும் இரண்டு படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் கார்த்தி நடித்த ’சர்தார்’ என்ற திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இன்று இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பூஜை சென்னையில் நடந்தது. முதல் பாகத்தை இயக்கிய பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தின் பூஜையில் கார்த்தி அவரது தந்தை சிவக்குமார், இயக்குனர் மித்ரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த படத்திற்காக சென்னையில் உள்ள தனியார் ஸ்டுடியோவில் பிரமாண்டமாக செட் அமைக்கப்பட்டு வருவதாகவும் வரும் 15ஆம் தேதி முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் ’சர்தார்’ படத்தின் முதல் பாகத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்த நிலையில் இரண்டாம் பாகத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.