'சபாஷ் நாயுடு' அடுத்தகட்ட படப்பிடிப்பு எப்போது?

  • IndiaGlitz, [Wednesday,August 17 2016]

உலகநாயகன் கமல்ஹாசனின் 'சபாஷ் நாயுடு' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன் கமல்ஹாசன் மாடிப்படிகளில் இருந்து கீழே விழுந்து காயமடைந்தார். ஒருசில வாரங்கள் சிகிச்சை பெற்ற அவர் தற்போது கிட்டத்தட்ட குணமாகிவிட்டார். ஜிம் மற்றும் பிசியோதெரபி மூலம் முழு குணமடைந்து வரும் நிலையில் 'சபாஷ் நாயுடு' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
வரும் செப்டம்பர் மாதம் இரண்டாவது வாரம் 'சபாஷ் நாயுடு' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டிணத்தில் நடைபெறவுள்ளதாகவும், இந்த படப்பிடிப்பிற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
முதல்முறையாக கமல்ஹாசன் தனது மகள் ஸ்ருதிஹாசனுடன் இணைந்து நடித்துள்ள இந்த படத்தில் ரம்யாகிருஷ்ணன், பிரம்மானந்தம் உள்பட பலர் நடிக்கின்றனர். இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் இந்த படம் ஒரே நேரத்தில் தயாராகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.