ராமர் கோவில் விவகாரம்: 30 வருடங்களுக்கு முன்பே பிரதமரை கண்டித்த கமல்ஹாசன்..!

  • IndiaGlitz, [Tuesday,January 23 2024]

அயோத்தியில் நேற்று ராமர் கோவில் திறக்கப்பட்ட நிலையில் இது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு 30 வருடங்களுக்கு முன்பே இது குறித்து நான் பதில் கூறிவிட்டேன், அதே நிலை தான் தற்போதும் உள்ளது, புதிதாக எந்த கருத்துக்களும் இல்லை என்றும் உலக நாயகன் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நேற்று சென்னை ஆழ்வார்பேட்டை மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து கமல்ஹாசன் தலைமையில் ஆலோசனை செய்யப்பட்டது. அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது ராமர் கோவில் திறக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதில் கூறினார்.

இதைப் பற்றி நான் 30 வருடங்களுக்கு முன்பே பேசி உள்ளேன், அதே கருத்து தான் இப்போதும் எனக்கு உள்ளது, புதிதாக எந்த கருத்தும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். 30 வருடங்களுக்கு முன்பே அன்றைய பிரதமர் நரசிம்மராவ் அவர்களை சந்தித்த கமல்ஹாசன், பாபர் மசூதி இடிப்புக்கு கண்டனம் தெரிவித்திருந்தார் என்பதும் அப்போது பத்திரிகைகளில் அந்த செய்தி பரபரப்பாக வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நடிகை ஜெயப்ரதாவுக்கு அப்போது அளித்த பேட்டியில் ’ஒரு அரசியல்வாதி என்பவர் மதங்களுக்கு அப்பால் பட்டு இருக்க வேண்டும்’ என்றும் தெரிவித்திருந்தார். 30 வருடங்களுக்கு முன் கமல்ஹாசன் அளித்த இந்த பேட்டியில் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.