ஒரே ஒரு பாடலுக்காக கமலுடன் இணைந்த ஒட்டுமொத்த இசையுலகம்

கொரோனாவால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக மக்கள் படும் துன்பம், இந்த நேரத்தில் மனிதர்கள் சக மனிதர்களிடம் காட்ட வேண்டிய மனிதநேயம் ஆகியவை குறித்து உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் ஒரு பாடல் எழுதியுள்ளார் என்றும், இந்த பாடலுக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார் என்றும், பல இசையுலக மேதைகள் பாடும் ‘அன்பும் அறிவும்’ என்ற பாடல் இன்று வெளியாகவுள்ளது என்றும் வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இந்த ‘அன்பும் அறிவும்’ என்ற பாடல் சற்றுமுன் வெளியாகியுள்ளது. கமல்ஹாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த பாடலை கமல்ஹாசனுடன் யுவன்ஷங்கர் ராஜா, அனிருத், பாம்பே ஜெயஸ்ரீ, ஷங்கர் மகாதேவன், சித் ஸ்ரீராம், தேவிஸ்ரீ பிரசாத், சித்தார்த், ஸ்ருதிஹாசன், ஆண்ட்ரியா, பிக்பாஸ் வின்னர் முகின் மற்றும் ஜிப்ரான் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.

இந்த பாடலுக்கு அமைக்கப்பட்டிருக்கும் காட்சியும், பாடலின் வரியும் கச்சிதமாக பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்பதும், மனிதநேயம் வெளிப்பட வேண்டிய சரியான நேரம் இதுதான் என்று இந்த பாடல் எடுத்து கூறுவது இந்த பாடலை பார்க்கும் ஒவ்வொருவரையும் நெகிழ வைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. கமல்ஹாசனின் இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.