தேர்தலில் போட்டி: கமல் எடுத்த முக்கிய முடிவு!

  • IndiaGlitz, [Thursday,March 14 2019]

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவது என்று முடிவு செய்து, போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்பமனுவையும் பெற்றுள்ளது. இக்கட்சியின் வேட்பாளர்கள் வரும் 24ஆம் தேதி கோவையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளனர்.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி, 18 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் போட்டியிடும் என்று கமல் இன்று அறிவித்துள்ளார். எனவே இந்த இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்பமனுவை இன்றுமுதல் அளிக்கலாம் என்று கமல் அறிவித்துள்ளார்.

சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான விருப்பமனுக்களை இன்று முதல் தலைமை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்றும், விருப்ப மனுவுடன் தலா 10 ஆயிரம் ரூபாயும் செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற இடைத்தேர்தலிலும் போட்டி என அறிவிக்கப்பட்டுள்ளதால் எம்பி அல்லது எம்.எல்.ஏ இவை இரண்டில் கமல்ஹாசன் எதில் போட்டியிடுவார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இதற்கான விடை வரும் 24ஆம் தேதி கோவை பொதுக்கூட்டத்தில் தெரியவரும்.