பிலிம்ஸ் நியூஸ் ஆனந்தன் படத்திறப்பு விழாவில் கமல்-விஷால்

  • IndiaGlitz, [Sunday,May 01 2016]

தமிழ் சினிமாவின் முதல் பி.ஆர்.ஓ என்ற புகழ்பெற்ற பிலிம்நியூஸ் ஆனந்தன் அவர்கள் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி மரணம் அடைந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அவருடைய ஞாபகமாக அவரது புகைப்படம் திறப்பு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த படத்திறப்பு விழாவில் உலக நாயகன் கமல்ஹாசன், நடிகர் சங்க செயலாளர் விஷால், இயக்குனர் சித்ரா லட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசியபோது, "பிலிம் நியூஸ் ஆனந்தன் என்னை அவ்வளவு மரியாதையாக நடத்தினார், சிறுவனாக இருந்த போதே நீங்க என்றுதான் என்னை அழைப்பார். என் குரு நாதர் கே. பாலசந்தரே தனது 80 வது பிறந்த நாளில் பிலிம் நியூஸ் ஆனந்தன் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார். அந்த அளவுக்கு மரியாதைக்குரியவர் பிலிம் நியூஸ் ஆனந்தன்' என்று கூறினார்.
விஷால் பேசியபோது, "பிலிம்நியூஸ் ஆனந்தன் பெயரில், என்னுடைய டிரஸ்ட் மூலம் 2 பெண் குழந்தைகளை படிக்க வைப்பேன்' என்று கூறினார்.
இயக்குனர் சித்ரா லட்சுமணன் கூறியபோது, "பிலிம் நியூஸ் ஆனந்தன் பெயரில் ஆவண காப்பகம் ஒன்றை உருவாக்க வேண்டும். அதில் அவர் கலெக்‌ஷன் இடம் பெற வேண்டும்' என்று கூறினார்.