கமல், ரஜினியை கைகுலுக்கி வரவேற்ற ஓபிஎஸ்: பொன்னாடை போர்த்திய அமைச்சர்

  • IndiaGlitz, [Sunday,October 01 2017]

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 90வது பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய மணிமண்டபம் சற்றுமுன் திறக்கப்பட்டது. சென்னை அடையாறு சத்யா ஸ்டுடியோ அருகே 2,124 சதுர அடியில் ரூ.2.80 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த மணிமண்டபத்தை துணைமுதல்வர் ஓபிஎஸ் அவர்கள் திறந்து வைத்தார்.

இந்த விழா தமிழக அரசு விழாவாக இருப்பதால், சமீபகாலமாக தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வரும் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொள்வார்களா? என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருவரும் சிவாஜி மீதும் அவர் குடும்பத்தின் மீது வைத்திருந்த அன்பால் இன்று இந்த விழாவில் கலந்து கொண்டனர். அவர்கள் இருவரையும் சிவாஜி குடும்பத்தினர்களும், துணைமுதல்வர் ஓபிஎஸ் அவர்களும் கைகுலுக்கி வரவேற்றனர்

மேலும் விழா மேடைக்கு கமல்ஹாசனையும், ரஜினிகாந்தையும் அழைத்த அமைச்சர் ஜெயகுமார் கமல்ஹாசனுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார். அதேபோல் ரஜினிகாந்த் அவர்களுக்கு துணைமுதல்வர் ஓபிஎஸ் அவர்கள் பொன்னாடை போர்த்தினார்.

பல்வேறு அரசியல் கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் சிவாஜி கணேசன் மணிமண்டப திறப்பு விழாவில் மேடை நாகரிகத்தை கடைபிடித்து கமல், ரஜினி இருவருக்கும் பொன்னாடை போர்த்திய துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கும், அமைச்சர் ஜெயகுமாருக்கும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.