மருத்துவ சிகிச்சைக்கு காத்திருக்கும் பெண்: மிகப்பெரிய தொகை கொடுத்த கலைப்புலி எஸ் தாணு!

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான கலைபுலி எஸ் தாணு அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண் ஒருவருக்கு 5 லட்சம் கொடுத்து உதவி செய்துள்ள தகவல் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்கள் பல சமூக சேவைகள் செய்து வருகிறார் என்பதும் மருத்துவ சிகிச்சைக்காக காத்திருக்கும் பலருக்கு அவர் நிதியுதவி செய்துள்ளார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சென்னை காவேரி மருத்துவமனையில் இரட்டை நுரையீரல் அறுவை சிகிச்சை செய்ய காத்திருக்கும் பெண்மணி ஒருவருக்கு 5 லட்ச ரூபாய் கொடுத்து உதவி செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

Dual lung transplant அறுவைசிகிச்சைக்கு காத்திருக்கும் பெண்மணிக்கு, 5 லட்சம் தந்து உதவ வாய்ப்பளித்த காவேரி மருத்துவமனைக்கு என் நன்றிகள். அவர் சிகிச்சை முடிந்து முழு நலத்துடன் திரும்ப இறைவனை இறைஞ்சுகிறேன்’ என்று கூறியுள்ளார். இதனை அடுத்து கலைப்புலி எஸ் தாணு அவர்களுக்கு நெட்டிசன்களின் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் கலைப்புலி எஸ் தாணு தயாரித்த ’நானே வருவேன்’ என்ற திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் சூர்யா நடிக்கும் ’வாடிவாசல்’ என்ற திரைப்படத்தை தயாரிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.