படிப்பறிவு இல்லாத அரசியல் தலைவர்கள்? சர்ச்சை கருத்தால் நடிகை கஜோல் அளித்த விளக்கம்

  • IndiaGlitz, [Monday,July 10 2023]

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை கஜோல் சட்டம் தொடர்பான புதிய வெப் தொடரில் நடித்து முடித்துள்ளார். இந்தத் தொடருக்கான நேர்காணலில் கலந்து கொண்டபோது அரசியல் தலைவர்களின் கல்வி அறிவு நிலை குறித்து கருத்துத் தெரிவித்த நிலையில் அதற்கு பாசிடிவ், நெகட்டிவ் என இரு தரப்புகளில் இருந்தும் கருத்து வெளியாகிய நிலையில் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை கஜோல் தமிழில் ‘மின்சார கனவு‘ திரைப்படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளியில் நடிகர் தனுஷ் நடித்திருந்த ‘வேலைக்காரன்‘ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்திய சினிமாவில் அதிக வரவேற்பு பெற்ற நடிகையான இவர் சமீபத்தில் வெளியாகிய ‘லஸ்ட் ஸ்டோரி 2’ ஆந்தலாஜி திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து சட்டம் தொடர்பான புதிய வெப் சீரிஸ் ‘தி ட்ரையல்’ தொடரில் நடித்து முடித்துள்ளார். இந்தத் தொடர் ஹாஸ்டாரில் வரும் 14 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இதுதொடர்பான நேர்காணல்களில் கலந்துகொண்டு வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் நடிகை கஜோல் பேசிய நேர்காணல் ஒன்றில் ‘இந்தியா போன்ற நாட்டில் மாற்றம் மெதுவாக உள்ளது. இது மிக மிக மெதுவாக உள்ளது. ஏனென்றால் நாம் நமது மரபுகளில் மூழ்கி நமது சிந்தனை செயல்முறைகளில் சிக்கிக் கொண்டுள்ளோம். நிச்சயமாக அது கல்வியுடன் தொடர்பு கொண்டிருக்க வேண்டும்.

படிப்பறிவு இல்லாத அரசியல் தலைவர்கள் நம் நாட்டில் உள்ளனர். அவர்கள்தான் நம்மை ஆண்டு வருகின்றனர். அவர்களில் பலருக்கும் கண்ணோட்டம் என்பதே இல்லை. அது கல்வி மூலம்தான் கிடைக்கும். கல்வி குறைந்தபட்சம் மாறுபட்ட கண்ணோட்டத்துக்கான வாய்ப்பையாவது கொடுக்கும்‘ என்று கூறியிருந்தார்.

நடிகை கஜோலின் இந்தக் கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் சில ரசிகர்கள் ஆதரவு அளித்திருந்தாலும் அரசியல் மட்டத்தில் பல்வேறு சர்ச்சையை இது சந்தித்து வந்தது. அதிலும் குறிப்பாக சிவசேனா கட்சியின் பெண் தலைவரான பிரியங்கா சதுர்வேதி எதிர்ப்பு தெரிவித்து இருந்த நிலையில் நடிகை கஜோல் தனது கருத்து விளக்கம் அளித்திருக்கிறார்.

அதில், ‘யாரையும் இழிவுபடுத்தும் நோக்கத்தில் இதனைத் தெரிவிக்கவில்லை. கல்வி மற்றும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றித்தான் கருத்து தெரிவித்தேன். எனக்கு எந்த அரசியல் தலைவரையும் இழிவுப்படுத்தும் நோக்கம் கிடையாது. நாட்டை சரியான பாதையில் வழிநடத்தும் சில சிறந்த தலைவர்கள் நம்மிடம் உள்ளனர்‘ என்று நடிகை கஜோல் டிவிட்டரில் பதிவு செய்திருக்கும் கருத்துகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.