சுவர் ஏறி குதித்து வந்து என்னை மிரட்டுகிறார்.. தந்தை குறித்து பகீர் புகார் அளித்த 'கடைக்குட்டி சிங்கம்' நடிகை..!

  • IndiaGlitz, [Thursday,July 06 2023]

கார்த்தி நடித்த 'கடைக்குட்டி சிங்கம்’ என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகை தனது தந்தை சுவரில் குறித்து தன்னையும் தனது குடும்பத்தையும் மிரட்டுவதாக கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழில் ’தொண்டன்’ என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆகி அதன் பிறகு ’செம்ம’ ’கடைக்குட்டி சிங்கம்’ ’வெண்ணிலா கபடி குழு 2’ உட்பட ஒரு சில படங்களில் நடித்தவர் நடிகை அர்த்தனா பினு. தனது தாயார் மற்றும் பாட்டியுடன் வாழ்ந்து வரும் நிலையில் அவரது வீட்டுக்கு அவரது தந்தை வந்து மிரட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது:

நான் என் அம்மா தங்கை, ஆகியோர் என்னுடைய அம்மாவின் அம்மா பாட்டி வீட்டில் கடந்த சில ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம். என் அம்மாவும் அப்பாவும் சட்டபூர்வமாக விவாகரத்து பெற்று விட்டனர்.

இந்த நிலையில் என் தந்தை அத்துமீறி எங்கள் வீட்டில் நுழைந்து எங்களை மிரட்டி வருகிறார். கதவு பூட்டப்பட்டு இருந்தாலும் அவர் கதவை திறக்கச் சொல்லி ஜன்னல் வழியாக மிரட்டுகிறார். என் தங்கையையும் பாட்டியையும் கொன்று விடுவதாக அவர் கூறுகிறார்.

மேலும் நான் சினிமாவில் நடிக்க கூடாது என்றும் மீறி நடித்தால் எந்த எல்லைக்கும் செல்வேன் என்றும் மிரட்டுகிறார். அது மட்டுமின்றி படப்பிடிப்பு நடக்கும் தளத்திற்கு வந்து படக்குழுவினர்களையே மோசமாக பேசுகிறார். அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தனது தந்தை வீட்டின் சுவர் ஏறி குதித்து வரும் வீடியோவையும் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.