விளையாடிக் கொண்டிருந்தபோதே சரமாரியாகச் சுடப்பட்ட இந்திய வீரர்… அதிர்ச்சியில் ரசிகர்கள்!

  • IndiaGlitz, [Wednesday,March 16 2022]

இந்தியா சார்பாக சர்வதேச அளவில் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிகளைக் குவிந்துவந்த கபடி வீரர் சந்தீப் நங்கல் நேற்று விளையாடிக் கொண்டிருந்தபோதே சரமாரியாகச் சுடப்பட்டுள்ளார். அவரது உடலில் 20க்கும் மேற்பட்ட குண்டுகள் நுழைந்திருக்கலாம் எனக் கூறப்பட்டு வரும் நிலையில் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியை வெளியிட்டு வருகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்கா, பிரிட்டன், கனடா போன்ற நாடுகளுக்குச் சென்று இந்தியா சார்பாக சர்வதேசப் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வந்தவர் சந்தீப் நங்கல். இவர் தன்னுடைய திறமையான ஆட்டத்தால் பல வெற்றிகளை இந்தியாவிற்கு பெற்றுத்தந்துள்ளார். இந்நிலையில் நேற்று பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டம் மாலியன் பகுதியில் நடைபெற்ற ஒரு போட்டியில் கலந்து கொண்டு விளையாடி வந்துள்ளார். அப்போது அந்தக் கூட்டத்தில் இருந்த மர்ம நபர்கள் அவரைச் சரமாரியாகச் சுட்டுத் தள்ளியுள்ளனர். இதனால் சம்பவ இடத்திலேய சந்தீப் உயிரிழந்து இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் போலீசார் சந்தீப்புக்கு சொந்தமாக கபடி கூட்டமைப்பு ஒன்று இயங்கி வருகிறது. அதுதொடர்பான விவகாரத்தில் மர்மநபர்கள் அவரைத் தாக்கியிருக்கலாம் என்றும் இந்தத் தாக்குதல் காரணமாக அவருடைய உடலில் 20 க்கும் மேற்பட்ட குண்டுகள் நுழைந்திருக்கிறது என்றும் கூறியுள்ளனர். இந்திய வீரர் ஒருவர் விளையாட்டு களத்திற்குள்ளேயே சுடப்பட்டு இருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.