விஜய்யின் தெறி'க்கு அடுத்து கார்த்தியின் 'காற்று வெளியிடை

  • IndiaGlitz, [Saturday,August 13 2016]

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பைலட் வேடத்தில் கார்த்தி நடித்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் தற்போது சென்னை அருகே படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மேலும் விரைவில் காஷ்மீர் படப்பிடிப்புக்கு செல்ல படக்குழுவினர் தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் தெலுங்கு மாநில உரிமை வியாபாரம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. விஜய்யின் 'தெறி', அனுஷ்காவின் ருத்ரம்மாதேவி உள்பட பல வெற்றி படங்களை தெலுங்கு மாநிலங்களில் ரிலீஸ் செய்த பிரபல தயாரிப்பாளர் 'தில்ராஜூ' இந்த படத்தின் தெலுங்கானா, ஆந்திரபிரதேச உரிமைகளை மிகப்பெரிய தொகைக்கு பெற்றுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
கடந்த ஆண்டு தில்ராஜூ வெளியிட்ட 'தெறி', தெலுங்கு மாநிலங்களில் நல்ல வசூல் பெற்றதை அடுத்து தற்போது 'காற்று வெளியிடை' படத்தின் உரிமையை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இந்த படத்தில் கார்த்தி, அதிதி ராவ் ஹைத்ரி, ஷராதா ஸ்ரீநாத், ஆர்ஜே பாலாஜி, டெல்லி கணேஷ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.