பிரதமர் மோடியை விமர்சனம் செய்பவர்கள் குறைபிரசவத்தில் பிறந்தவர்கள்: கே பாக்யராஜ்

பிரதமர் மோடியை விமர்சனம் செய்பவர்கள் குறைபிரசவத்தில் பிறந்தவர்கள் என இயக்குநர் கே பாக்யராஜ் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரதமரின் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் புதிய இந்தியா 2022 என்ற நூல் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் இயக்குநர் கே பாக்யராஜ் கலந்து கொண்டார் இந்த நூலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட பாக்யராஜ் பெற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பாக்யராஜ் பேசியபோது, ‘அண்ணாமலை இங்கிருந்து கர்நாடகா சென்று சிறப்பாக பணியாற்றினார். நான் கர்நாடகத்தில் இருந்தபோது அவரைப் பற்றி பெருமையாக பேசுவதை கேட்டு ஆச்சரியப்பட்டேன். பாஜகவுக்கு சரியான தலைவரை தேர்வு செய்துள்ளார்கள். பிரதமரின் திட்டங்கள் குறித்த இந்த புத்தகத்தை பெறுவதை நான் மிகவும் பாக்கியமாக கருதுகிறேன்.

பிரதமர் வெளிநாடு செல்வதை ஒருசிலர் குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர் ஓய்வில்லாமல் எப்படி சென்றார்? அவர் உடலை எப்படி கவனித்துக் கொள்கிறார்? என்று நான் ஆச்சரியமாக பார்த்தேன். இந்தியாவுக்கு இப்படி ஒரு துணிச்சலான பிரதமர் தேவை.

பிரதமர் மோடியை விமர்சித்து வருபவர்கள் குறைபிரசவத்தில் பிறந்தவர்கள் என்று நினைத்துக் கொள்ளுங்கள். நல்லவர்கள் அவரை பற்றி தவறாக பேச மாட்டார்கள். பிரதமர் மோடி பெயர் மக்கள் மனதில் எழுதப்பட்டுள்ளது’ என்று கே.பாக்யராஜ் பேசியுள்ளார். கே. பாக்யராஜின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.