ஆர்கே செல்வமணி படம் இயக்கினார் என்பதே எனக்கு சந்தேகமாக உள்ளது: பாக்யராஜ்

இயக்குனர் ஆர் கே செல்வமணி பல வெற்றிப்படங்களை இயக்கியதாக கூறுகிறார்கள், ஆனால் அந்த படங்களை எல்லாம் அவர் தான் இயக்கினாரா? என்ற சந்தேகம் எனக்கு உள்ளது என இயக்குனர் பாக்யராஜ் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் சங்கத் தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் பாக்யராஜ் தலைமையிலான இமயம் அணியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த அறிமுகக் கூட்டத்தில் பேசிய கே பாக்யராஜ் ’இயக்குனர் சங்க தேர்தலில் போட்டியிட அதிக கட்டணம் இருப்பதால் அனைவரும் போட்டியிட முடியாத சூழல் உள்ளது என்றும் எனவே தேர்தலில் போட்டியிட கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் இயக்குனர் சங்கத்திற்காக பிரத்யேகமாக ஒரு யூடியூப் சேனல் ஆரம்பிக்கப்படும் என்றும், ஒரு திரைப்படம் தணிக்கை சான்றிதழ் கிடைப்பதற்கு முன்பாகவே அனைவருக்கும் ஊதியம் கிடைக்க உறுதி செய்யப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார்.

மேலும் தற்போதுள்ள இயக்குனர் சங்க நிர்வாகிகளை தொலைபேசியில் கூட அணுக முடியவில்லை என்றும் ஆனால் நான் நீண்ட நாட்களாக ஒரே தொலைபேசி எண்ணை வைத்து உள்ளதால் என எளிதாக அணுகலாம் என்றும் கூறினார்.

இயக்குனர் ஆர் கே செல்வமணி இதுவரை நன்கு சம்பாதித்து ஆண்டு அனுபவித்து விட்டார். நான் தேர்தலில் நிற்பதால் செல்வமணிக்கு அவரை அறியாமல் பயம் வந்து விட்டதாகவும் அவர் கூறினார்.

மேலும் இயக்குனர் செல்வமணி எடுத்த படங்கள் எல்லாம் நன்றாக ஓடியதாக கூறுகிறார்கள். ஆனால் அந்தப் படத்தை எல்லாம் அவர்தான் இயக்கினாரா? என்ற சந்தேகம் எனக்கு வந்து விட்டது என்றும் செல்வமணியை கடுமையாக விமர்சனம் செய்தார். கே பாக்யராஜின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.