close
Choose your channels

சீதைக்காக போராடிய ஜடாயு கழுகு எப்படி இருக்கும் தெரியுமா? நிஜத்தில் ரசிக்க ஒரு பட்ஜெட் சுற்றுலா!

Wednesday, July 5, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இராமாயணத்தில் இடம்பெற்ற ஜடாயு கழுகு, சீதையை மீட்கும் போராட்டத்தில் கடுமையாகப் போராடி ஒரு கட்டத்தில் இறந்துபோகும். இந்த கழுகு இறந்த இடம் தற்போது கேரளத்தின் கொல்லத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது. மேலும் ஜடாயு கழுகின் தோற்றத்திலேயே பிரம்மாண்டமான ஒரு சிலையும் அங்கு வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த சிலைதான் தற்போது பலரையும் ஈர்த்து வருகிறது.

கேரளாவின் கொல்லத்தில் இருந்து 38 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கும் சடையமங்கலம் எனும் பகுதியில் ஜடாயு மையம் அல்லது ஜடாயு அட்வென்சர்ச் பார்க் அமைந்திருக்கிறது. இந்தப் பகுதி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கும் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க பகுதியாகும்.

வெறுமனே சடாயு கழுகின் சிலை மட்டுமல்லாமல் இந்த இடம் சாகச விரும்பிகளுக்கு ஏற்றதாகவும் அமைந்திருக்கிறது. அந்த வகையில் இந்த ஜடாயு பூங்காவில் கலை, புராணங்கள், கலாச்சாரம், தொழில்நுட்பம், ஆரோக்கியம், சாகசம் என்று அனைத்து அம்சங்களும் கொண்ட பல்வேறு விளையாட்டு, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்திருக்கின்றன.

பொதுவாக ஜடாயு பாறை என அழைக்கப்படும் இந்த வரலாற்றுச் சின்னம் எதற்காக என்ற கேள்வி எழலாம். ராமாயணத்தில் ராமன், சீதை, லட்சுமணன் மூவரும் வனவாசத்தில் இருந்தபோது அவர்களுக்கு துணையாக சடாயு என்ற கழுகு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் கழுகு ராமனும் லட்சுமணனும் காட்டிற்கு வேட்டைக்கு சென்ற நிலையில் சீதைக்கு துணையாக கூடவே இருந்தது.

ஆனால் சீதையை கவர்ந்து செல்ல ராவணன் வருகிறான். அப்போது ராவணனை எதிர்த்து இந்த வயதான சடாயு கழுகு கடுமையாக அவரிடம் போராடுகிறது. ஒருகட்டத்தில் தனது போராட்டத்தில் தோற்றுப்போன கழுகின் இறகுகளைக் கூட ராவணன் வெட்டி வீசுகிறார். அதற்குப்பிறகு ராவணன் தனது தோளில் சீதையை சுமந்தவாறு இலங்கைக்கு செல்கிறார்.

ராவணனிடம் தோற்றுப்போன இந்த சடாயுதான் சீதை கடத்திச் செல்லப்பட்ட தகவலை ராமனிடம் கூறுகிறது. பின்னர் அந்தப் போராட்டத்தில் இறந்தும் போகிறது.

இப்படி சடாயு ராவணிடம் சண்டைப்போட்டு இறந்த இடம் கேரளாவின் கொல்லம்தான் என்று பலரும் நம்புகின்றனர். இந்த நம்பிக்கைக்கு உயிர் கொடுக்கும் வகையிலும் சடாயு கழுகுவின் கருணையை பாராட்டும் விதமாகவும் அங்கே மிகப்பெரிய பூங்கா அமைக்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜடாயு மையம்

ஒட்டுமொத்த இயற்கையும் குடிகொண்டிருக்கும் சடையமங்கம் பகுதி முழுக்கவே அடர்ந்த தாவரங்களும் மலைகளும் நிரம்பியிருக்கின்றன. இதில் பாறைகளுக்கு மேல் பிரம்மாண்ட அளவில் உருவாக்கப்பட்டு இருப்பதுதான் ஜடாயு மையம்.

இதில் அமைக்கப்பட்டு இருக்கும் பறவை சிலையானது 65 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டு உள்ளது. 200 அடி நீளம், 150 அடி அகலம் மற்றும் 70 அடி உயரம், 15,000 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த பறவை சிலை உண்மையிலேயே பிரம்மிப்பூட்டும் ஒரு வரலாற்று சின்னம் என்றே சொல்ல வேண்டும். இந்த சிலைக்கு கின்னஸ் அங்கீகாரம் கொடுக்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரபல சினிமா தயாரிப்பாளர் ராஜிவ் அஞ்சலால் இந்த வடிவமைப்பிற்கு உதவியதாகவும் தகவல்கள் கூறப்படுகின்றன. மேலும் இந்த சிலையானது 3 மாடி அளவிற்கு உயரம் கொண்டது என்றும் பாறைகளுக்கு மேலே இருக்கும் இதைப் பார்த்தற்கு 1,000 அடி உயரத்தில் அமைந்திருப்பது போல காட்சியளிக்கும் என்றும் சுற்றுலாவாசிகள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

மேலும் அங்குள்ள பூங்காவில் பெயிண்ட் பால், பாறாங்கல், ஜிப் லைன், மலையேற்றம், வில்வித்தை, ராப்பல்லிங், ஜுமரிங், சுவர் ஏறுதல் என்று சாகசத்திற்கு பஞ்சமே இல்லாமல் பல்வேறு செயல்பாடுகள் தினம்தோறும் அரங்கேற்றப் படுகின்றன.

இதைத்தவிர அங்குள்ள ஃபுட் கோர்டில் தென்னிந்தியாவில் கிடைக்கும் பல உணவுகளை ருசிக்கலாம்.

பாறைகளுக்கு மேல் இருப்பதால் இதை வெறுமனே இயற்கை அம்சம் என்று குறுக்கிவிட முடியாத அளவிற்கு செயற்கை தொழில்நுட்பங்களும் இங்கு வரிசை கட்டி நிற்கின்றன. அந்த வகையில் டிஜிட்டல் அருங்காட்சியகம், 6டி தியேட்டர் போன்ற அம்சங்களும் இங்கு காணப்படுகின்றன.

இதைத்தவிர கேபிள் கார்கள், சித்தமருத்துவ குகைகள், ஹெலி டாக்ஸி, கிளாம்பிங் போன்ற உண்மையான சகாசத்திற்கு ஏற்றதாக இங்கு அமைந்திருக்கின்றன. இங்கொரு மூலிகைத் தோட்டமும் காணப்படுகிறது.

இந்த ஜடாயு பூங்காவிற்கு அருகிலேயே பாலருவி நீர்வீழ்ச்சி மற்றும் கலங்கரை விளக்கம் போன்றவை சுற்றுலா வாசிகளுக்கு கூடுதலான உற்சாகத்தை தரும் அம்சமாகும்.

ஜடாயு பூங்காவிற்கு விமானம் மூலமாக வரவிரும்பினால் 51.2 கிமீ தொலைவில் திருவனந்தபுரம் சர்வதேசம் விமான நிலையம் இருக்கிறது. மேலும் ரயில் பயணத்தைத் தேர்வு செய்பவர்கள் புனலூர் ரயில் நிலையத்திற்கு வந்தபிறகு வெறுமன 25 கி.மீ தொலைவில் வரலாற்று சிறப்பம்சம் கொண்ட ஜடாயு மையத்திற்கு வந்து சேரலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment