ரசிகர்களை குளிர்விக்க தயாரிப்பாளர் சங்கத்தின் அதிரடி திட்டம்

  • IndiaGlitz, [Friday,October 13 2017]

மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி, மாநில அரசின் கேளிக்கை வரி ஆகியவை திரையுலகினர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளதால் இந்த சுமையை படம் பார்க்க வரும் பார்வையாளர்களின் தலையில் தான் சுமத்த வேண்டிய கட்டாயத்தில் திரையுலகினர் உள்ளனர். மத்திய அரசும், மாநில அரசும் வரிகளை குறைக்க இதுவரை சம்மதம் தெரிவிக்கவில்லை. தமிழக அரசுடன் நடத்தப்பட்டு வரும் பேச்சுவார்த்தையில் கேளிக்கை வரி 10%ல் இருந்து 8%ஆக குறைக்க வைத்த கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் வரிச்சுமையை வேறு வழியின்றி ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஒருவேளை தள்ளப்பட்டால் அதற்கு பதிலாக பார்வையாளர்களுக்கு ஒருசில சலுகைகள் பெற்றுத்தர தயாரிப்பாளர் சங்கம் திட்டமிட்டுள்ளது. அவற்றில் ஒன்று திரையரங்குகளில் பார்க்கிங் கட்டணம் கிடையாது, அதுமட்டுமின்றி தியேட்டரில் விற்பனை செய்யும் தின்பண்டங்கள் முதல் தண்ணீர் பாட்டிலகள் வரை அதில் குறிப்பிட்டிருக்கும் எம்.ஆர்.பி விலைக்கு மேல் விற்பனை செய்யக்கூடாது போன்ற கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்டுள்ளதாம்

மேலும் பார்வையாளர்கள் வீட்டில் இருந்து கொண்டு வரும் தின்பண்டங்களை அனுமதிக்க வேண்டும் என்பது உள்பட இன்னும் பல சலுகைகளுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் திட்டமிட்டுள்ளது. வரிச்சுமை காரணமாக கட்டண உயர்வுக்கு பதில் மேற்கண்ட சலுகைகள் கிடைத்தால் ரசிகர்கள் மீண்டும் திரையரங்குகளுக்கு வருவார்கள் என்பது தயாரிப்பாளர்கள் சங்கத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்