'மஞ்சும்மெல் பாய்ஸ்' விவகாரம்.. இசைஞானிக்கு இழப்பீடு வழங்கப்பட்டதா? வழக்கறிஞர் விளக்கம்..!

  • IndiaGlitz, [Wednesday,August 07 2024]

மலையாளத் திரைப்படமான ’மஞ்சும்மெல் பாய்ஸ்’ திரைப்படத்தில் இளையராஜாவின் பாடல் பயன்படுத்தப்பட்டதை அடுத்து அவருக்கு 60 லட்சம் இழப்பீடு வழங்குவதாக கூறப்பட்ட நிலையில் இது குறித்து இளையராஜாவின் வழக்கறிஞர் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான ’மஞ்சும்மெல் பாய்ஸ்’ என்ற திரைப்படத்தில் ’குணா’ படத்தின் ’கண்மணி அன்போடு காதலன்’ என்ற பாடல் பயன்படுத்தப்பட்டதை அடுத்து அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

தன்னுடைய அனுமதி இல்லாமல் தன்னுடைய பாடலை பயன்படுத்தியதால் காப்புரிமை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இளையராஜாவுக்கு 60 லட்ச ரூபாய் ’மஞ்சும்மெல் பாய்ஸ்’ தயாரிப்பாளர் இழப்பீடு வழங்கியதாக செய்திகள் ஊடகங்களில் வெளியானது.

இந்த நிலையில் இது குறித்து இளையராஜாவின் வழக்கறிஞர் கூறிய போது ’மஞ்சும்மெல் பாய்ஸ்' பட குழுவினருக்கும் இளையராஜாவுக்கும் இடையே இதுவரை இழப்பீடு குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்றும் இழப்பீடு பணம் எதுவும் வழங்கப்படவில்லை’ என்றும் தெரிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.