திமுக-வுக்கு வாக்களித்தால், உங்கள் கதை முடிந்துவிடும்...! ராமதாஸ் பிரச்சாரம்...!

  • IndiaGlitz, [Thursday,April 01 2021]

எடப்பாடியில் முதல்வர் பழனிச்சாமிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த, ராமதாஸ் திமுகவுக்கு வாக்களித்தால் உங்கள் கதை முடிந்துவிடும் என்று கூறி பிரச்சாரம் செய்தார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு ஒருசில நாட்களே உள்ள நிலையில், கட்சி வேட்பாளர்கள் வெயில் என்றும் பாராமல் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிச்சாமிக்கு ஆதரவாக, பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்தின் போது அவர் பேசியிருப்பதாவது,

அதிமுக-வில் படிப்படியாக உயர்ந்தவர் தான் எடப்பாடி பழனிச்சாமி. கிளைச்செயலாளராக இருந்து, கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராக உயர்ந்தவர். இவருக்கே மக்களாகிய நீங்கள் வாக்களிக்க வேண்டும். ஆக்கும் சக்தி, அழிக்கும் சக்தியாக இருப்பவள் பெண். பெண்களை கடவுளாக வணங்கக் கூடிய நம்மண்ணில், முதல்வரின் தாயைப் பற்றி ராசா கூறியது கடும் கண்டனத்துக்குறியது. 2ஜி ஊழல் மூலம் 1.76 லட்சம் கோடி ஏமாற்றிவிட்டு சிறைசென்றுவந்தவர் தான், அவரெல்லாம் பெண்களை இழிவாக பேசுகிறார்.

அதிமுக-வின் தேர்தல் அறிக்கை அமுதசுரபியாகவும், பாமக அறிக்கை நாட்டின் வளர்ச்சிக்காகவும் இருக்கிறது. ஆனால் திமுக அதைக்கூட காப்பி அடித்து வெளியிட்டுள்ளது. கருணாநிதி நான் சொல்லியதால் தான் ஸ்டாலினை துணை முதல்வராக ஆக்கினார். எடப்பாடியில் இரட்டை இலையை எதிர்த்து களமிறங்குபவர்கள் டெபாசிட் கூட வாங்கமாட்டார்கள். மக்களே சிந்தித்து வாக்களியுங்கள், திமுக-விற்கு வாக்களித்தால் உங்கள் கதை தீர்ந்துவிடும் என்றும் கூறியுள்ளார்.