ஆகஸ்ட் 28 முதல் 'இதயம்' சீரியல்.. ஜீ தமிழ் வெளியிட்ட அறிவிப்பு 

  • IndiaGlitz, [Tuesday,August 22 2023]

சின்னத்திரையில் புதிய சீரியல்கள் பெரும் வரவேற்பு பெற்று வரும் நிலையில் ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் ’இதயம்’ என்ற சீரியல் ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாயகியின் கணவன் விபத்தில் சிக்கி மூளை சாவு அடைய, அவருடைய இதயம் இன்னொரு நபருக்கு கொடுப்பதற்காக போராடும் நாயகியின் கதை தான் இந்த ’இதயம்’ என்ற தொடர்.

உண்மை காதலுக்கு அழிவில்லை என்பதை உணர்த்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சீரியலில் இதய மாற்று சிகிச்சியால் உயிர் பிழைக்கும் நபர், நாயகியை பார்ப்பதும் அப்போது ஏற்படும் ஒரு இனம்புரியாத உணர்வுகள் காட்சிகளாக ’இதயம்’ சீரியலில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த சீரியலின் புரமோ வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ‘இதயம்’ சீரியலில் நாயகியாக ஜனனி அசோக் குமார் நடிக்க நாயகனாக ரிச்சர்ட் ஜோஸ் என்பவர் நடிக்கிறார். கடலூரில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த இதயம் சீரியல் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.