எங்க அணிக்கு வந்துடுங்க: அதிருப்தியில் இருக்கும் இந்திய வீரருக்கு அழைப்பு விடுத்த ஐஸ்லாந்து

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காததால் அதிருப்தியில் இருக்கும் இந்திய அணி வீரர் அம்பத்தி ராயுடுவுக்கு ஐஸ்லாந்து நாட்டின் கிரிக்கெட் அணி பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளது

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் அம்பத்தி ராயுடு பெயர் இருக்கும் என கருதப்பட்டது. ஆனால் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் திறன் வாய்ந்த விஜய்சங்கருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதால் அம்பத்தி ராயுடு ஏமாற்றம் அடைந்தார். இதனையடுத்து அவர் '3D' குறித்து ஒரு டுவிட்டையும் பதிவு செய்தார்.

மேலும் தவான், புவனேஷ்குமார், விஜய்சங்கர் ஆகியோர் காயம் அடைந்தபோதாவது அம்பத்தி ராயுடுவை அணிக்கு அழைப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மயங்க் அகர்வால் அணியில் இணைந்துள்ளார். இதனால் அதிருப்தியில் இருக்கும் அம்பத்தி ராயுடுவை ஐஸ்லாந்து கிரிக்கெட் அணி அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து ஐஸ்லாந்து கிரிக்கெட் போர்டின் டுவிட்டர் பக்கத்தில், ' மயங்க் அகர்வால் இதுவரை 3 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். உலகக்கோப்பைக்கான இந்திய அணியிலும் இடம்பிடித்து விட்டார். எனவே அம்பத்தி ராயுடு இனியாவது தீவிரமாக யோசித்து 3டி கண்ணாடியை கழற்றிவிட வேண்டும். ராயுடுவுக்காக நாங்கள் தயாரித்துள்ள ஐஸ்லாந்து நாட்டின் குடியுரிமை ஆவணங்களை படித்து பார்க்க அவருக்கு சாதாரண கண்ணாடிகளே போதும். எங்கள் அணிக்கு வந்து விடுங்கள். எங்களுக்கு உங்கள் ஆட்டம் மிகவும் பிடிக்கும், என பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளது.