சந்தானம் படத்தில் கூடுதலாக 2 ஆக்சன் காட்சிகள் ஏன்: இயக்குனர் எம்.ராஜேஷ்

  • IndiaGlitz, [Sunday,October 15 2017]

காமெடி நடிகரில் இருந்து ஆக்சன் ஹீரோவாக மாறியுள்ள சந்தானம் சமீபத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் மற்றும் வழக்கறிஞர் ஒருவருடன் ரியல் ஆக்ச்னிலும் ஈடுபட்டார். நேற்று நடைபெற்ற 'சக்க போடு போடு ராஜா' இசை வெளியீட்டு விழாவில் ஆர்யா இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இதே விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் எம்.ராஜேஷ் கூறியபோது, 'சந்தானம் நடித்த 'சக்க போடு போடு ராஜா' படத்தின் ஆக்சன் காட்சிகளை நான் ஏற்கனவே பார்த்துள்ளேன். இந்த காட்சிகள் அனைத்தையும் பார்த்த பின்னர் அடுத்து நான் இயக்கவுள்ள சந்தானம் படத்தில் அதிக ஆக்சன் காட்சிகள் வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 'சக்க போடு போடு ராஜா' படத்தின் ஆக்சன் காட்சிகள் நன்றாக வைத்துள்ளதை வைத்துதான் இதை சொல்கிறேன், வேறு எதையும் நீங்கள் நினைத்து கொள்ள வேண்டாம்' என்று கூறினார்

மேலும் சந்தானம் அவர்களின் தன்னம்பிக்கை தான் அவரை காமெடி நடிகரில் இருந்து ஆக்சன் நடிகராக மாற்றியுள்ளது. இதை நான் என்னுடைய முதல் படத்தில் இருந்து அவரை பார்த்து வருகிறேன். ஒரு நண்பனாக் அவர் வெற்றி பெற்று வருவது எனக்கு பெருமையாக உள்ளது' என்று கூறினார்.

இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் சந்தானம் நடிக்கவுள்ள படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.