தீபாவளி கொண்டாட்டம்… பசுமை பட்டாசு தேர்வு? அஜீரணக் கோளாறு?? சில எளிமையான வழிமுறை!

  • IndiaGlitz, [Monday,November 09 2020]

 

தீபாவளி என்றாலே கலர் கலரான இனிப்பு வகைகள், பொறிபொறியான பட்டாசுகள், புத்தாடை இதுதான் நினைவுக்கு வரும். இப்படி கொண்டாடப்படும் பண்டிகையின்போது நாட்டுக்கும் வீட்டுக்கும் ஏன் முக்கியமாக நமது உடலுக்கும் பாதிப்பு இல்லாமல் பாதுகாத்து கொள்வது ரொம்ப அவசியம். அந்த வகையில் சில மாநில அரசுகள் பசுமை பட்டாசுகளை பரிந்துரை செய்கின்றன.

அதென்ன பசுமை பட்டாசு? அந்த வகை பாட்டாசுகளை வெடித்தால் சுவாரசியம் இருக்காதே? எனப் பல கேள்விகள் எழலாம். பசுமை பட்டாசுகளிலும் அதே சுவாரசியம், ஒளி, சத்தம் எல்லாம் இருக்கும். ஆனால் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் அதில் இருக்காது. லிதியம், பேரியம் எனப்படும் ரசாயனங்களை கலக்காமல் செய்யும் பசுமை பட்டாசுகளினால் சுற்றுச்சூழலுக்கு கணிசமாக பாதிப்பு இருக்காது என சமூகநல ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர். அந்த வகையில் நமது தேர்வும் பசுமை பட்டாசுகளாக இருந்தால் நாட்டுக்கும் சுற்றுச்சூழலுக்கும் நல்லது.

அடுத்து தீபாவளி பண்டிகையில் கலர் கலரான இனிப்புகளை சாப்பிட்டுவிட்டு வயிற்றை பிடித்துக் கொண்டு அலையாமல் இருக்க ஏதாவது ஒரு தீர்வு மிகவும் அவசியம். அந்த வகையில் அஜீரணத்தைத் தவிர்ப்பதற்காக தீபாவளி லேகியத்தை அனைவரின் வீடுகளிலும் தயாரித்து வைத்துக் கொள்ளலாம். இந்த லேகியம் எண்ணெய், இனிப்பு, அதீத உணவு போன்ற கோளாறுகளால் ஏற்படும் வயிற்று உப்பசத்தை குறைத்து விடும். மேலும் பருவமழை காலத்தில் தீபாவளி பண்டிகை வருகிறது. எனவே தொற்றுநோய்களில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் இந்த லேகியம் மிகவும் உதவியாக இருக்கும்.

தயாரிப்பு வழிமுறை- தனியா விதை -1 tsp, மிளகு – ½ tsp, சீரகம் – 1/2 tsp, ஓமம் -1/2 tsp, காய்ந்த இஞ்சி – ¼ tsp, நல்லெண்ணெய் – 1 tsp. மேலும் இதுகூடவே வெல்லப்பாகு செய்ய வெல்லம் – 1/3 கப், தண்ணீர்- ¼ கப் இவற்றை எடுத்துக் கொண்டு லேகியத்தை தயாரிக்கலாம். முதலில் தனியா, மிளகு, சீரகம், ஓமம் ஆகியவற்றை தொடக்கூடிய சூடு பதத்தில் 2 முதல் 3 நிமிடங்கள் வரை கடாயில் போட்ட வறுத்துக் கொள்ள வேண்டும். பின்பு காய்ந்த இஞ்சியைச் சேர்ந்து அதையும் வறுத்து எடுக்க வேண்டும்.

வறுத்து எடுத்தப் பொருட்களை ஆற வைத்து பின்பு, அதை பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். அதேநேரம் பாகு செய்வதற்காக எடுத்து வைத்துள்ள வெல்லத்தைக் கொண்டு கெட்டி பதத்திற்கு வெல்லப்பாகு காய்ச்சி அதில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்க்க வேண்டும். கட்டிகளாக இல்லாமல் அரை சூட்டில் கிளற வேண்டும். 2 கொதி விட்டு அதில் நல்லெண்ணெய் சேர்த்து இறக்கி விட்டால் லேகியம் ரெடி… இப்படி தயாரித்து வைத்திருக்கும் தீபவாளி லேகியத்தை பண்டிகை அன்று வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம். மேலும் சாப்பிடுவதற்கு முன்பே இதை சூடு தண்ணீரில் எடுத்துக் கொண்டால் சாப்பிடும் உணவு மிக எளிதாக ஜீரணமாகி விடும். குதூகலமான பண்டியைக் கொண்டாடுவதற்கு இது சிறந்த வழிமுறையாக இருக்கும்.