18 வயதில் பைலட்-ஆன சிறுமி… யார் இந்த சாக்ஷி கோச்சார்?

  • IndiaGlitz, [Friday,June 30 2023]

இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயது சிறுமி ஒருவர் வணிக ரீதியாக பயணிக்கும் விமானத்திற்கு ஓட்டுநர் உரிமத்தைப் பெற்று இந்தியாவின் இளமையான பைலட் எனும் பெயருக்குச் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார். ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து இவர் செய்துள்ள இந்தச் சாதனை தற்போது பலரிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தின் பர்வானூ எனும் பகுதியில் பிறந்தவர் சாக்ஷி கோச்சார். ஒரு சிறிய வணிகக் குடும்பத்தில் பிறந்த இவருக்கு 10 வயதான போதே ஒரு சிறந்த விமானி ஆக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டு இருக்கிறது. விமானி ஆக வேண்டும் என்பது கனவாக இருந்தாலும் சிறிய வயதிலேயே இவர் சிறந்த நடனக் கலைஞராகவும் தன்னை வளர்த்துக் கொண்டுள்ளார்.

அந்த வகையில் மாநிலத்திலேயே நடனத்தில் முதல் மற்றும் இரண்டாம் பரிசுகளைத் தக்கவைத்துக் கொண்ட இவர் 10 ஆம் வகுப்பு முடித்த உடனேயே தனது பைலட் கனவை நிறைவேற்றுவதற்கான காரியத்தில் இறங்கியுள்ளார். இதற்காக சண்டிகரில் உள்ள அரசு மாதிரி மூத்த மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்த இவர் தனது 12 ஆம் வகுப்பில் இயற்பியல் மற்றம் கணித பாடங்களுடன் அறிவியலைத் தேர்வு படித்திருக்கிறார்.

இந்நிலையில் தனது பெற்றோரின் உதவியோடு சண்டிகரில் உள்ள ஸ்கைலைன் ஏவியேஷன் கிளப்பில் இணைந்து பைலட்டாக பயிற்சி பெற துவங்கியிருக்கிறார். கேப்டன் ஏடி மானெக் என்பவரிடம் 4 மாதங்கள் கடினமான வணிக பைலட் பயிற்சியைப் பெற்ற இவர் அமெரிக்காவில் உள்ள விமான கிளப் பயிற்சிக்காக (சிபிஎல்) அமெரிக்கா சென்று தற்போது ஒரு முழுமையான வணிக விமானி ஆகியிருக்கிறார்.

மேலும் இதற்கான ஓட்டுநர் உரிமம் கடந்த மே 30 அன்று சாக்ஷி கோச்சாருக்கு 18 வயது பூர்த்தியான நிலையில் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால் இந்தியாவின் இளைய விமானி என்ற பட்டமும் அவருக்கு கிடைத்திருக்கிறது.

ஒரு விமானி ஆக வேண்டும் என்று தான் சிறிய வயதில் கண்ட கனவு தற்போது நிஜமாகியிருப்பதாக கூறியிருக்கும் சாக்ஷி கோச்சார் இதற்காக ரூ.70 லட்சம் செலவு ஆகியிருக்கிறது. இந்தியாவில் ஒருவர் விமான பைலட் ஆக வேண்டும் என்பதெல்லாம் பெரிய விஷயமாக இருந்து வருகிறது. இந்நிலையில் என்னுடைய பெற்றோர், சகோதரர், தாத்தா பாட்டி என்று அனைவரும் எனக்கு ஆதரவாக இருந்து இதை உண்மையாக்கி இருக்கின்றனர்.

இந்நிலையில் எனக்கு வேலை கிடைத்ததும் எனது பெற்றோருக்கு அந்தப் பணத்தை திருப்பித் தருவேன் என்றும் சாக்ஷி கோச்சார் கூறியிருப்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.