தங்கக் கடத்தலில் புது டெக்னிக்… சென்னை ஏர்போட்டில் பிடிப்பட்ட 1.4 கிலோ தங்கம்!!

  • IndiaGlitz, [Tuesday,August 25 2020]

 

சென்னை ஏர்போட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 1.4 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. ஆனால் இந்த முறை தங்கக் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட முறை மிகவும் வித்தியாசமாக இருந்ததாகச் சுங்கத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். எப்போதும் தங்கத்தை கடத்துவோர் ஏதாவது பொருட்களில் கட்டிகளாக மறைத்து வைத்து எடுத்து வருவது வழக்கம். ஆனால் இந்த முறை பொருளே இல்லாத வெறுமையான அட்டைப் பெட்டிக்குள் வைத்து கடத்தியிருக்கின்றனர்.

முதலில் தங்கத்தை பேப்பர் போன்ற வடிவில் ஷீட்டுகளாக மாற்றி அதை அட்டைப் பெட்டியின் ஷீட்டுக்குள் மறைத்து வைத்து எடுத்து வந்துள்ளனர். அட்டைப் பெட்டியின் ஷீட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்ட தங்க ஷீட்டுகளின் தரம் மாறிப்போகால் இருக்க கார்பன் பேப்பர்களையும் மேலே சுற்றியுள்ளனர். இத்தனை தந்திரமாக தங்கத்தை கடத்தியிருப்பதைப் பார்த்து சுங்கத்துறை அதிகாரிகளே வியந்ததாகவும் கூறப்படுகிறது. காரணம் கார்பன் ஷீட்டுக்குள் ஒளித்து வைத்து அதை அட்டைப் பெட்டியின் ஷீட்டுக்குள் வைத்து ஒட்டி ஒன்றுமே தெரியாதது போல மாற்றியிருப்பதை சாதாரண நேரத்தில் அதிகாரிகளால் கண்டுபிடிக்கவே முடியாத காரியம் என்றும் தெரிவித்து உள்ளனர்.

உளவுத்துறை கொடுத்த தகவலின்படி குறிப்பிட்ட ஒருவரின் பொருட்களை சென்னை சுங்கத்துறையினர் சோதனை செய்து பார்த்தபோது இந்த விவரம் தெரிய வந்திருக்கிறது. விசாரணையில் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ஒருவர் துபாயில் எலக்டீரிஷியனாக வேலைப் பார்த்து வந்ததாகவும் கொரோனா பரவல் காரணமாக வேலையிழந்து விட்டதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதலில் சென்னை திரும்பிய அந்த நபர் மிக நுணுக்கமாக தனது பொருட்களை வேறு விமானத்தில் புக் செய்து கொண்டு வந்திருக்கிறார். ஆனால் உளவுத்துறை கொடுத்த தகவலின்படி தற்போது தங்கக்கடத்தல் அம்பலமாகி கைது செய்யப்பட்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடத்தப்பட்ட தங்கம் 1.4 கிலோ எடையில் சுமார் 78.4 லட்சம் மதிப்பிலானது என்றும் சுங்கத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.