விடிய விடிய கொட்டும் மழை: சென்னை உள்பட 6 மாவட்டங்களில் பள்ளிகள் விடுமுறை..

  • IndiaGlitz, [Monday,June 19 2023]

சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் விடிய விடிய கனமழை கொட்டிய காரணத்தினால் இன்று தமிழகத்தில் உள்ள ஆறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அதே நேரத்தில் இன்று 12ஆம் வகுப்பு துணைத் தேர்வு தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளதை அடுத்து விடுமுறை அளிக்கப்பட்ட மாவட்டங்களிலும் தேர்வு நடைபெறும் என்று தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சென்னை அண்ணா சாலை உள்பட பல முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளதை அடுத்து அந்த நீரை அகற்றும் பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில மாதங்களாக கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில் சென்னை உள்பட வட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்து வருவது பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி ஆகிய 12 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது.