கொரோனாவின் கோரம்!!! கண் கலங்க வைக்கும் வீடியோ…

  • IndiaGlitz, [Monday,March 09 2020]

 

கொரோனா வைரஸ் கடும் பாதிப்பை உலகம் முழுக்க ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது இதயத்தை கசக்கும் ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோவினைப் பார்த்த பார்வையாளர்கள் கொரோனாவை கொடுமையான அரக்கன் என்று விமர்சித்து வருகின்றனர்.

அந்த வீடியோவில் ஒரு மருத்துவ செவிலி தன் மகளை குறிப்பிட்ட இடைவெளியில் இருந்து பார்க்கிறார். தாயின் கண்களில் தண்ணீர் உருண்டு திரள்கிறது. அதைப் பார்த்த குழந்தை உடனே கதறி அழத் தொடங்குகிறது. மருத்துவ ஊழியர் தன் குழந்தைக்கு சமாதான மொழிகளை கூறத் தொடங்குகிறார். “அம்மா கொடுமையான அர்க்கர்களுடன் சண்டையிட்டு கொண்டிருக்கிறேன். வைரஸ் முழுவதுமாகக் கட்டுப்படுத்தப் பட்டவுடன் நான் வீட்டிற்கு வருகிறேன்“ என உறுதியளிக்கிறார்.

கொஞ்சமும் சமாதானம் ஆகாத குழந்தை தனது கையை முடிந்த அளவிற்கு விரித்துத் தன் பாசத்துக்கான ஏக்கத்தைக் காட்டுகிறது. உடைந்து போன அந்த தாய் தன் கைகளையும் முடிந்த வரை அகலமாக திறந்து தன் பாசத்தை பகிர்ந்து கொள்கிறார். காற்றின் இடைவெளியில் ஒரு அற்புதமான பாசப் போராட்டம் நடக்கிறது.  பின்பு அன்புமகள் தனது தாய்க்காக கொண்டு வந்த ஒரு பெட்டியை ஒரு இடத்தில் வைக்கிறது. அதை அந்த தாய் எடுத்துக் கொள்கிறார்.

இந்த வீடியோவை சீனாவின் ஒரு தொலைகாட்சி ஊடகம் ஒளிபரப்பி வருகிறது. இதைப் பார்த்த பலர் இது கொடுமையான காலக் கட்டம், இதயத்தை உருக்கும் காட்சி எனக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் தன்னலமற்ற மருத்துவ ஊழியர்களின் பணியை பலர் பாராட்டி வருகின்றனர்.

சீனாவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 3,200 தாண்டிய நிலையில், நோய் தொற்றும் ஒரு லட்சத்தைத் தொட்டிருப்பதாக உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே அந்நாட்டில் மருத்துவர்களும் செவிலியர்களும் மாதக் கணக்காகச் சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களது குடும்பம், குழந்தைகள் என எதையும் பொருட்டாகக் கருதாமல் உழைத்துவரும் மருத்துவ ஊழியர்களுக்கு சமீபத்தில் அந்நாட்டு அரசு கௌரவித்தும் இருந்தது.

பல ஊழியர்கள் தங்களின் முகங்களில் போடப்பட்டிருந்த முகமூடிகளின் தழும்புகளால் கடும் அவதிகுள்ளான புகைப்படங்களையும் சமீபகாலமாகப் பார்க்க முடிந்தது. கொரோனா தொற்றினால் பாதிக்கப் பட்டவர்கள் தனிமைப் படுத்தப் பட்டு சிகிச்சை பெற்று வருவதைப் போன்றே அதன் ஊழியர்களும் மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில் தாய்க்கும் மகளுக்கும் இடையே நடந்த பாசப் பேராட்டத்தை பலர் இணையத்தில் பகிர்ந்து கொண்டு தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். வீடியோவிற்கு கருத்து தெரிவித்துள்ள ஒருவர் கொடுமையான அரக்கனிடம் இருந்து சீனர்களை அந்தக் கடவுள் காப்பாற்றட்டும்” என்று பதில் அளித்துள்ளார். இன்னொருவர் “இக்காட்சியைப் பார்த்து தனக்கு கண்ணீரே வந்து விட்டதாகவும்” பதவிட்டு இருக்கிறார்.