கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • IndiaGlitz, [Tuesday,August 25 2015]

கடந்த 1980-90களில் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் உச்சத்தில் இருந்தபோது "இனிக்கும் இளமை' என்ற படத்தில் வில்லனாக அறிமுகமானவர் நடிகர் விஜய்காந்த். ரஜினிக்கு பிறகு கோலிவுட்டில் ஜெயித்த கருப்பு நடிகர் இவர் மட்டுமே. அதேபோல் ரஜினியை போலவே ஆரம்பகட்டத்தில் வில்லனாக சில படங்களில் நடித்து அதன்பின்னர் ஹீரோவாக புரமோஷன் ஆனவர். இவருடைய ஆரம்பகால வெற்றிப்படங்களுக்கு பெரிதும் உறுதுணையாக இருந்தவர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் என்றால் அது மிகையாகாது.

சட்டம் ஒரு இருட்டறையில் தொடங்கிய விஜயகாந்த்-எஸ்.ஏ.சந்திரசேகர் கூட்டணி அதன்பின்னர் சாட்சி, வெற்றி, ஓம்சக்தி, நீதியின் மறுபக்கம், சட்டம் ஒரு விளையாட்டு என பல படங்களில் இவர்களின் வெற்றிக்கூட்டணி தொடர்ந்தது. தமிழ் சினிமாவில் பெரும் சாதனையாக 1984ஆம் ஆண்டில் “மதுரை சூரன்” முதல் ” ஜனவரி 1″ படம் வரை 18 படங்களும்
1985ஆம் ஆண்டில் ” அலை ஓசை” முதல் “நானே ராஜா நானே மந்திரி” வரை 17 படங்களும் ஹீரோவாக நடித்துள்ளார். ஒரு வருடத்தில் 17 படங்கள், 18 படங்கள் என இதுவரை எந்த நடிகரும் ஹீரோவாக நடிக்கவில்லை. இனியும் நடிக்க வாய்ப்பில்லை.

போலீஸ் வேடம் என்றால் கூப்பிடு விஜயகாந்தை என்று கோலிவுட் திரையுலகமே கூறும் அளவுக்கு மிக கச்சிதமாக போலீஸ் கேரக்டர் பொருந்தியது இவருக்கு மட்டுமே. சிவந்த கண்கள், அழுத்தமான பார்வை, ஆகியவை இவரது போலீஸ் கேரக்டரை மேலும் மெருகேற்றியது. மாநகரக் காவல், சேதுபதி ஐ.பி.எஸ், புலன் விசாரணை, என இவரது போலீஸ் படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட்.

கண்டிப்பான போலீஸ் கேரக்டர்கள் மட்டுமின்றி கருணையான கேரக்டர்களையும் தன்னால் செய்ய முடியும் என விஜயகாந்த் நிரூபித்த படங்கள் சின்னக்கவுண்டர், சொக்கத்தங்கம் என பல படங்களை கூறலாம்.

கண்டிப்பான தேர்தல் அதிகாரியாக இவர் நடித்த 'தென்னவன்', ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இவர் நடித்த பாரதிராஜாவின் 'தமிழ் செல்வன்',சந்தனக்கடத்தல் வீரப்பனை பிடிக்கும் அதிகாரி கேரக்டரில் இவர் நடித்த கேப்டன் பிரபாகரன் போன்ற படங்களில் இவர் நடித்த நடிப்பை வேறொருவர் நடிக்க முடியுமா என்பது சந்தேகமே.

இவற்றில் கேப்டன் பிரபாகரன் விஜயகாந்த் நடித்த 100வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்த்திரையுலகில் எம்.ஜி.ஆருக்கு பின்னர் 100வது படத்தை மாபெரும் வெற்றிப்படமாக கொடுத்த ஒரே நடிகர் விஜயகாந்த் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. சிவாஜி நடித்த 'நவராத்திரி, கமல் நடித்த ராஜபார்வை, ரஜினிகாந்த் நடித்த ஸ்ரீராகவேந்திரர், பிரபு நடித்த ராஜகுமாரன், சத்யராஜின் வாத்தியார் வீட்டு பிள்ளை, சிவகுமாரின் ரோசாப்பூ ரவிக்கைகாரி, போன்ற படங்கள் அனைத்தும் அந்தந்த நடிகர்களுக்கு 100வது படமாக இருந்தாலும் சூப்பர் ஹிட் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.ஜி.ஆர், சிவாஜியை அடுத்து தென்னிந்திய நடிகர் சங்கத்தை சிறப்புடன் நடத்தியவர் விஜயகாந்த் மட்டுமே. இவர் தலைவராக இருந்த காலத்தில்தான் நடிகர் சங்கத்தின் அனைத்து கடன்களும் தீர்க்கப்பட்டு, கையிருப்பு இருக்கும் நிலை நடிகர் சங்கத்தில் ஏற்பட்டது.

கடந்த 2005ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்த விஜயகாந்த், தான் சந்தித்த முதல் தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார். 2009ஆம் ஆண்டிற்கு பின்னர் விஜய்காந்த் திரையுலகில் இருந்து சற்று ஒதுங்கி தன் பார்வையை முழுநேர அரசியல் பக்கம் திருப்பினார். அரசியல் கட்சியை ஆரம்பித்ததால், நடிகர் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகிய விஜயகாந்த், 2010ஆம் ஆண்டிற்கு பின்னர் முழுநேர அரசியல்வாதியாக மாறினார். அதன்பின்னர் கடந்த 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 41 தொகுதிகளில் தனது கட்சி வேட்பாளர்களை நிற்க வைத்து 29 தொகுதிகளை கைப்பற்றி எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்து பெற்றார்.

கள்ளங்கபடம் இல்லாதவர், சினிமாவுக்கு வெளியே நடிக்க தெரியாதவர், எதையும் தைரியமாக எதிர்கொள்பவர், கட்சி தொண்டர்களை அரவணைத்து செல்பவர் என்பதால் இவரது கட்சிக்கு தமிழகத்தில் நல்ல செல்வாக்கு உள்ளது. இன்று தனது 67வது பிறந்தநாளை கொண்டாடும் விஜயகாந்த் மேலும் பல வெற்றிகளை பெற்று நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகிறோம்.

More News

இந்திக்கு செல்கிறது விஜய்யின் 'டாடி மம்மி''

இயக்குனர் பிரபுதேவா இயக்கத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த படம் 'வில்லு'. இளையதளபதி விஜய்,...

விஜய்-சங்கீதா தம்பதிக்கு திருமண நாள் வாழ்த்து

கடந்த சில நாட்களாக இளையதளபதி விஜய் குறித்து எந்த செய்தி வந்தாலும் அது உடனே சமூக வலைத்தளங்களில் டிரண்ட் ஆகி வருகிறது....

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் ரிலீஸ் செய்யும் அடுத்த பேய்ப்படம்

நாய்கள் ஜாக்கிரதை' படத்தின் வெற்றியின் மூலம் மீண்டும் கோலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த நடிகர் சிபிராஜ், அதே வேகத்துடன் ஆரம்பித்த அடுத்த படம்தான் 'ஜாக்சன் துரை'.....

எந்திரன் - புலி. ஒரு அபூர்வ ஒற்றுமை

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி ரிலீஸாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளதை

முடிவுக்கு வந்தது ஜீவா-நயன்தாராவின் திருவிழா

வளர்ந்து வரும் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான நடிகர் ஜீவா, வித்தியாசமான கதாபாத்திரங்களில் ரிஸ்க் எடுத்து நடிப்பதில் வல்லவர்...