விவாகரத்து குறித்த தரம் தாழ்ந்த விமர்சனங்கள்.. ஜிவி பிரகாஷின் வருத்தமான பதிவு..!

  • IndiaGlitz, [Wednesday,May 15 2024]

ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஆகிய இருவரும் பரஸ்பரம் பிரிவதாக தங்களது சமூக வலைதளங்களில் அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பல்வேறு செய்திகளை வெளியாகி வருகின்றன. ஒரு சில செய்திகள் எல்லை மீறி, தரம் தாழ்ந்தவாறு பரவி வருவதாக கூறப்படும் நிலையில் சில தரந்தாழ்ந்த விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் ஜி வி பிரகாஷ் சமூக வலைதளத்தில் வருத்தத்துடன் பதிவு செய்திருப்பதாவது:

புரிதலும், போதுமான விவரங்கள் இல்லாமலும் அனுமானத்தின் பேரில் இரு மனங்கள் இணைவது, பிரிவது குறித்து பொதுவெளியில் விவாதிக்கப்படுவது ரதிஷ்டவசமானது. பிரபலமான நபராக இருப்பதாலே ஒருவரின் தனிப்பட்ட வாழ்விற்குள் அத்துமீறி நுழைந்து தரம் தாழ்ந்த விமர்சனங்கள் வைப்பதும் ஏற்புடையதல்ல. தங்களின் கற்பனைக்கு வார்த்தைகள் மூலம் வடிவம் கொடுத்து சமூக ஊடகங்களில் வெளிப்படுத்துவதால் அது யாரோ ஒரு தனிநபரின் வாழ்க்கையை பாதிக்கும் என்பதை உணராத அளவுக்கு தமிழர் மாண்பு குறைந்து விட்டதா...?

இருவரும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டு பிரிந்ததன் பின்னணியையும், காரணங்களையும் என்னுடன் நெருங்கிய பழகிய நண்பர்கள், உறவினர்கள் நன்கறிவார்கள் . அனைவரிடமும் கலந்தாலோசித்து பின்புதான் இருவரும் இந்த முடிவை மேற்கொண்டோம் . எங்களை பிரபலங்களாக உருவாக்கிய உரிமையிலோ அல்லது என் தனிப்பட்ட வாழ்க்கை மீது தங்களுக்கு இருந்த பேரன்பின் வெளிப்பாடாகவோ தங்களின் ஆதங்கமான விமர்சனங்கள் இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களின் மனதை அது மிகவும் காயப்படுத்துகிறது என்பதை உணர்த்தவே இதை பதிவிடுகிறேன்.

ஒவ்வொரு தனி மனிதரின் நியாயமான உணர்வுக்கும் மதிப்பளியுங்கள் . தங்களின் பேரன்புக்கும் ஆதரவுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி .