மீண்டும் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஜிவி பிரகாஷ் - சைந்தவி.. என்ன சொல்கிறார்கள்?

  • IndiaGlitz, [Thursday,May 16 2024]

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் அவரது மனைவி சைந்தவி ஆகிய இருவரும் பரஸ்பரம் பிரிவதாக தங்களது சமூக வலைதளங்களில் அறிவித்தனர் என்பதும் இந்த அறிவிப்பு தமிழ் திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் தங்களது அறிவிப்பில் இது இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு என்றும் இருவருடைய எதிர்காலத்தை கணக்கில் கொண்டு எடுத்த முடிவு என்றும் எங்களுடைய தனிப்பட்ட உரிமைகளுக்கு மதிப்பளித்து ஊடகங்கள் மற்றும் நண்பர்கள் இதுகுறித்து விவாதிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டனர்.

ஆனால் ஜி வி பிரகாஷ் - சைந்தவி பிரிவு குறித்து சில ஊடகங்கள் மற்றும் யூடியூப் சேனல்கள் தங்கள் இஷ்டத்திற்கு ஏராளமான கதைகள் கூறின என்பதும் இவை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது மீண்டும் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி தங்கள் வருத்தத்தை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சைந்தவி கூறியதாவது:

யூடியூப் சேனல்களில் எங்களுடைய விவாகரத்து குறித்து கூறப்படும் கதைகளை பார்ப்பதற்கு வருத்தம் அளிக்கிறது. எங்களுடைய முடிவுக்கு மதிப்பளிக்க கோரிக்கை விடுத்தும் இதுபோன்று கதைகள் புனையப்படுவது வேதனையாக இருக்கிறது.

ஒருவரின் குணாதிசயத்தை எந்தவித ஆதாரமும் இல்லாமல் சிதைப்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். இந்த முடிவு எங்கள் இருவரின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்பட்டது. நானும் ஜி.வி பிரகாஷ் குமாரும் பள்ளிப் பருவத்தில் இருந்து நண்பர்களாக இருந்துள்ளோம். 24 வருட நட்பு. அதே நட்புடன் இனியும் பயணிப்போம்’ என்று சைந்தவி கூறியுள்ளார்.

அதேபோல் ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் ’ஏராளமான சேனல்கள் தங்களுடைய சொந்த கற்பனை திறனை வெளியே காட்டிக் கொள்வதற்காக உண்மை இல்லாததை தெரிவித்து வருகின்றன . ஒரு சிலர் எங்களது பிரிவை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வரும் வகையில் கற்பனை கதைகளை வெளியிட்டு வருகிறார்கள். இருப்பினும் இந்த கடினமான நேரத்தில் எங்களுக்கு ஆதரவு அளித்த சிலருக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.

ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவியின் இந்த இரண்டு பதிவுகளும் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.