குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் மீட்கப்பட்ட கேப்டன் வருண் சிங் மரணம்!

  • IndiaGlitz, [Wednesday,December 15 2021]

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் மீட்கப்பட்ட விங் கேப்டன் வருண் சிங் கவலைக்கிடமான நிலையில் பெங்களூருவில் சிகிச்சைப் பெற்றுவந்தார். அவர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.

கடந்த 8 ஆம் தேதி இந்திய விமானப்படைக்குச் சொந்தமான இராணுவ ஹெலிகாப்டர் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது மோசமான வானிலை காரணமாக விபத்தில் சிக்கியது. இதில் இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதையடுத்து அந்த விபத்தில் இருந்து விங் கேப்டன் வருண் சிங் என்பவர் மட்டும் 80% தீக்காயங்களுடன் மீட்கப்பட்டார். மேலும் பெங்களூருவில் உள்ள இந்திய விமானப்படைக்குச் சொந்தமான கமெண்ட் மருத்துவமனையில் அவர் சிகிச்சைப் பெற்றுவந்தார். கவலைக்கிடமான நிலையில் இருந்த கேப்டன் வருண் சிங்கிற்கு கடந்த சில தினங்களாக உயிர்காக்கும் கவசங்கள் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் விங் கேப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டு உள்ளது. இந்தத் தகவல் ஒட்டுமொத்த இந்திய மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.