'பருத்தி வீரன்' பிரச்சனை.. மெளனம் கலைத்த ஞானவேல்ராஜா.. அறிக்கை வெளியீடு..!

  • IndiaGlitz, [Wednesday,November 29 2023]

கார்த்தி நடிப்பில், அமீர் இயக்கத்தில் உருவான ‘பருத்தி வீரன்’ என்ற திரைப்படம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் வெளியான நிலையில் இந்த படத்தின் பிரச்சினை குறித்து கடந்த சில நாட்களாக ஊடகங்களில் அமீர் மற்றும் ஞானவேல் ராஜா மாறி மாறி பேட்டி அளித்தனர்.

இதனை அடுத்து அமீர் ஆதரவாக திரையுலகினர் திரண்டனர் என்பதும் ஞானவேல் ராஜா தனது குற்றச்சாட்டுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாரதிராஜா உட்பட திரை உலக பிரபலங்கள் வலியுறுத்தினர் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: ‘பருத்தி வீரன்’பிரச்சனை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. நான் இதுநாள் வரை அதைப்பற்றி பேசியதில்லை, என்றைக்குமே அமீர் அண்ணா என்றுதான் நான் அவரை குறிப்பிடுவேன்.

ஆரம்பத்திலிருந்து அவர் குடும்பத்தாருடன் நெருங்கி பழகியவன். அவரது சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது. அதற்கு பதிலளிக்கும் போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னை வாழவைக்கும் சினிமா துறையையும் அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து இந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததாக கருதப்படுகிறது.