வேடிக்கை பார்த்த பக்கத்து வீட்டுக்காரருக்கு 55 கோடி ரூபாய் சொத்து… நெகிழ்ச்சி சம்பவம்!!!

  • IndiaGlitz, [Monday,December 07 2020]

 

எப்படியாவது ஒரு வழியில் அதிர்ஷ்டம் வரலாம். ஆனால் இப்படி கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டும் அளவிற்கு அதிர்ஷ்டம் வந்தால் அதை என்னவென்று சொல்வது. ஜெர்மனியில் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு ரூ.55 கோடி ரூபாய் சொத்தை வாரி வழங்கி இருக்கிறது ஒரு மாநகராட்சி நிர்வாகம். இதனால் நெகிழ்ந்து போன அந்தக் குடும்பத்தினர் நன்றியைத் தெரிவித்து வருகின்றனர்.

வடக்கு ஜெர்மனியில் உள்ள ஹெஸ்ஸே எனும் பகுதியில் கடந்த 1975 முதல் ஆல்ஃபிரட்- ரெனேட் எனும் தம்பதி வசித்து வந்திருக்கின்றனர். இவர்களுக்கு வாரிசு என்று யாரும் இல்லாத நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஆல்ஃபிரட் உயிரிழந்து விட்டார். இந்நிலையில் கவனிக்க யாரும் இல்லாத காரணத்தால் ரெனேட்டை ஒரு மருத்துவமனை கடந்த சில வருடங்களாக பராமரித்து வந்திருக்கிறது. அவரும் கடந்த டிசம்பர் மாதத்தில் உயிரிழந்து விட்ட நிலையில் சொத்துகளை என்ன செய்வது என்ற கேள்வி அந்த மாநகராட்சி நிர்வாகத்திற்கு வந்திருக்கிறது.

ரெனேட்-ஆல்ஃபிரட் தம்பதியினருக்கு 6.2 மில்லியன் அதாவது 55 கோடியே 34 லட்சம் மதிப்புடைய சொத்துகள் இருக்கிறதாம். இந்தத் தம்பதியினருக்கு நேரடி சொந்தமாக இருந்த ரெனேட்டின் ஒரே சகோதரியும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்து இருக்கிறார். இதனால் சொத்தை சொந்தம் கொண்டாடுவதற்கு யாருமே இல்லை. எனவே மொத்த சொத்தும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமாகி இருக்கிறது. ஆனால் மாநகராட்சி நிர்வாகமும் இதைப் பராமரிக்க முடியாது என கையை விரித்து இருக்கிறது.

இதனால் ரெனேட்டின் வீட்டிற்கு அருகில் குடியிருந்த பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு முழு சொத்தையும் கொடுத்துவிட அந்த மாநகராட்சி முடிவெடுத்து இருக்கிறது. இந்த முடிவை ஏற்றுக்கொண்ட அந்தக் குடும்பமும் இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தியதோடு அனைத்துச் சொத்துகளையும் தற்போது பராமரிக்கத் தொடங்கி விட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் அந்த ஊரில் உள்ள அனைவருக்கும் பயன்படும் வகையில் நீச்சல் குளம், குழந்தைகளுக்கு விளையாட சைக்கிள் ரேஸ் சாலை, விளையாட்டு பயிற்சி மையங்களையும் ஏற்பத்திக் கொடுத்து இருக்கிறார்கள். இதைத்தான் அதிர்ஷ்டம் என்று சொல்வார்கள்.