படிப்பை பத்தி உனக்கு ஏதாவது தெரியுமாடி? ஜோவிகாவுக்கு பதிலடி கொடுத்ததா 'எதிர்நீச்சல்' சீரியல்?

  • IndiaGlitz, [Friday,October 13 2023]

கடந்த சில நாட்களுக்கு முன்னாடி பிக் பாஸ் நிகழ்ச்சியில் படிப்பு குறித்து விசித்ரா மற்றும் ஜோவிகா ஆகியோர் இடையே பெரும் வாக்குவாதம் நடந்தது. எல்லோரும் படித்து டாக்டராகி விட்டால் கம்பவுண்டர் வேலையை யார் பார்ப்பது? படிப்பை குழந்தைகள் மீது திணிக்காதீர்கள், குழந்தைகள் விருப்பப்பட்டால் படிக்கட்டும். படிப்பை குழந்தைகள் மீது திணிப்பதால் பல குழந்தைகள் தற்கொலைக்கு முயல்கின்றனர் என்று ஆவேசமாக பேசினார். அவரது பேச்சு சமூக வலைத்தளத்தில் பெரும் சர்ச்சையை எழுப்பியது

இந்த நிலையில் ஜோவிகாவின் பேச்சுக்கு பதிலடி தரும் வகையில் ’எதிர்நீச்சல்’ சீரியலில் ஒரு காட்சி வருகிறது. அந்த காட்சியில் ’பொம்பள புள்ள படிச்சா குடி கெட்டுப் போயிடும் என்று அந்த சீரியலின் ஒரு கேரக்டர் சொல்ல, அதற்கு பிரியதர்ஷினி ஆவேசமாக பேசுகிறார்

‘உனக்கு படிப்பு பத்தி பேச எந்த அருகதையும் கிடையாது, நீ அடிக்கடி இடுப்புல சொருகி வச்சுகிட்டு பேசுறியே செல்போன், அதை கண்டுபிடிச்சவன் ஒரு படிச்சவன் தான். இன்னைக்கு ராக்கெட்டில் இருந்து நீ போட்ருக்க ஜாக்கெட் வரைக்கும் கண்டுபிடிச்சது ஒரு படிச்சவன் தான்.. அதுல குளிர் காஞ்சுகிட்டு படிப்பு தேவையில்லை என்று பேசுகிறாயா, ஏன்டி ஒரு சமூகத்திற்கு படிப்பு எவ்வளவு தேவை, ஏதாவது உனக்கு தெரியுமாடி.. படிப்பு தேவை இல்லைன்னு பேசிகிட்டு இருக்க.. படிப்பு பற்றி பேச உனக்கு அருகதை இல்லை..’ என்று கூறுகிறார்

இந்த வசனம் பிக்பாஸ் ஜோவிகாவுக்கு பதிலடி கூறுவதற்காகவே எதிர்நீச்சல் சீரியலில் வைக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.