முட்டையில் ஓவியம்.. சர்வதேச விருது வென்ற கோவை மாணவி!!!

  • IndiaGlitz, [Monday,November 02 2020]

 

முட்டையைப் பார்த்தாலே ஆம்லேட் போட்டு ஒருபிடி பிடிக்க வேண்டும் என்றுதான் நினைக்கத் தோன்றும். அந்த முட்டையில் 50 தேசிய தலைவர்களின் படத்தை அதுவும் குறைந்த நேரத்தில் வரைந்து கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் சர்வதேச விருதினை பெற்றிருக்கிறார். கொரோனா ஊரடங்கால் பல மாணவர்கள் என்ன செய்வது என்றே தெரியாமல் செல்போனை கட்டி அழுது கொண்டிருக்கும்போது சத்தமே இல்லாமல் ஒரு கல்லூரி மாணவி சர்வதேச விருதினைப் பெற்றிருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கோவையைச் சேர்ந்த தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ படித்து வருபவர் மோனிஷா. இவருக்கு ஓவியம் வரைவதில் அலாதி விருப்பம். கடந்த பிப்ரவரியில் ஒரு உற்சாகத்திற்காக முட்டையில் படம் வரையலாம் என முடிவெடுத்து இருக்கிறார். அப்படி முடிவெடுத்த அவர் குறைந்த நேரத்தில் 50 தேசிய தலைவர்களின் படங்களை வரைந்து சாதனை படைத்தார். இவரது முயற்சியை பாராட்டி இந்திய அளவில் “இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்டு” “கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்” என்ற இரு விருதுகள் வழங்கி கவுரவிக்கப் பட்டது.

அதோடு சிறுவர்களின் சாதனையை பாராட்டும் பிரபல நிகழ்ச்சியான Incredible talent ஆல் நடத்தப்பட்ட ஒரு சாதனை போட்டியில் முதல் 25 பட்டியலுக்கும் மோனிஷா தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். இந்தப் போட்டியில் உலகம் முழுவதும் உள்ள 2,000 சாதனையாளர்கள் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதையெல்லாம் வீழ்த்தும் விதமாக Global Excellent எனும் சர்வதேச விருதையும் இவர் பெற்றிருக்கிறார்.

முட்டையில் குறைந்த நேரத்தில் தேசியத் தலைவர்களின் ஓவியத்தை வரைந்து அசத்திய மோனிஷாவை பாராட்டும் விதமாக நம்முடைய சென்னையில் Doctorate for Young achiever award வழங்கப்பட்டு உள்ளது. இதனால் படித்து முடித்து ஆய்வு செய்யாமலே தற்போது டாக்டரேட் அவார்டையும் மோனிஷா பெற்று விட்டார். மேலும் இவரது சாதனை, கின்னஸ் விருதுக்கான பதிலை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறது. ஒருவேளை கின்னஸ் விருதினையும் பெற்றுவிட்டால் நம்முடைய கோவை மாணவி கின்னஸ் சாதனையாளராக அறிவிக்கப் படுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.