இந்த கை மண்வெட்டி பிடித்த கை- பிரச்சாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

வரும் தமிழகச் சட்டப்பேரவை தேர்தலுக்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று தருமபுரி மாவட்டம் அரூர் சட்டமன்றத் தொகுதியில் நிற்கும் அதிமுக வேட்பாளர் சம்பத்குமாரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய இபிஎஸ், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அதிமுகவை விமர்சித்து வருகின்றன. ஆனால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு என்னை யாருக்கும் தெரியாது.

தற்போது தினமும் என் பெயரை எதிர்க் கட்சியினர் தொடர்ந்து சொல்லி வருகின்றனர். மேலும் எவ்வளவோ முயற்சி செய்தும் அதிமுக கூட்டணியை உடைக்க முடியாது திணறவும் செய்தனர். இதைப் பார்க்கும்போது உழைப்பவர்கள் மட்டுமே உயர முடியும் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. மேலும் எதிர்க்கட்சிகளில் வாரிசு அரசியல் கொடிக் கட்டி பறக்கிறது என விமர்சித்த இபிஎஸ் என் குடும்பத்தில் இருந்து யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள் எனக் கூறினார்.

அதோடு தமிழகம் அதிமுக ஆட்சிக் காலத்தில் அதிக முதலீடு, நீர் மேலாண்மையில் முதலிடம் எனப் பல்வேறு துறைகளில் முன்னணி வகிக்கிறது. காரணம் இதுவரை விவசாயிகளுக்காக எந்த முதல்வரும் வரவில்லை. விவசாயத்தைப் பற்றி யாருக்கும் தெரியாது. நான் விவசாயி என்பதால் எனக்கு தெரிந்தது என்று பொதுமக்கள் மத்தியில் ஆவேசமாகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.