நீதிமன்ற உத்தரவை மீறி ஓடிடியில் ரிலீஸ்.. இயக்குனருக்கு ஒரு மாதம் சிறை..!

  • IndiaGlitz, [Saturday,April 06 2024]

நீதிமன்ற உத்தரவை மீறி திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட்ட இயக்குனருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் தலைமறைவாகி உள்ளதை அடுத்து அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இயக்குனர் பாலாஜி இயக்கத்தில் பிரஜின், வித்யா, பிரதீப், சார்லி உள்பட பலர் நடிப்பில் உருவான திரைப்படம் ’டி3 ’. இந்த படத்தை பி மாஸ் என்டர்டைன்மெண்ட் & ஜே கே எம் புரொடக்ஷன் என்னும் தயாரிப்பு நிறுவனங்கள் தயாரித்திருந்த நிலையில் இந்த படம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியானது.

இந்த நிலையில் இந்த படத்தை தயாரிக்க சாமுவேல் என்பவரிடம் தயாரிப்பாளர் மனோஜ் நான்கு கோடி ரூபாய் கடனாக பெற்ற நிலையில் இந்த படத்தின் உரிமையில் 60 சதவீதத்தை அவருக்கு தருவதாக ஒப்பந்தம் செய்திருந்தார். ஆனால் ஒப்பந்தம் படி அவர் பணம் கொடுக்காததை அடுத்து இந்த படத்தை ஓடிடியில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை அடுத்து நீதிமன்றம் இந்த படத்தை ஓடிடியில் வெளியிட தடை விதித்திருந்தது.

ஆனால் தடை உத்தரவை மீறி இந்த படம் ஓடிடியில் வெளியானதை அடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்ட நிலையில் தயாரிப்பாளர் மனோஜ் மற்றும் இயக்குனர் பாலாஜி நேரில் ஆதரவாக உத்தரவிடப்பட்டது. அதன்படி இயக்குனர் பாலாஜி நேரில் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் தடையை மீறி ஓடிடி தளத்தில் வெளியிட்டதை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவருக்கு ஒரு மாத சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் மனோஜ் ஆஜராகாத நிலையில் அவரை கைது செய்து செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.